வரலாறு காணாத பனிப்பொழிவு: மூணாறில் குவியும் சுற்றுலாப்பயணிகள்

மூணாறு: மூணாறில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவும் சூழலில், சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். தென்னகத்து காஷ்மீர் என்றழைக்கப்படும் கேரள மாநிலம், மூணாறில் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கும். இதில், டிசம்பர் இறுதி முதல் ஜன. 15 வரை மைனஸ் டிகிரி செல்சியஸ் ஆக மாறி பனிப்பொழிவு இருக்கும். கடந்தாண்டின் இறுதியில் இருந்தே மூணாறில் உறைபனி மைனஸ் டிகிரி செல்சியஸ் ஆக மாறியது.

இந்த வரலாறு காணாத காலநிலை மாற்றம் சுற்றுலாப்பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக நேற்று மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை நிலவியது. குண்டளை, தேவிகுளம், லாக்காடு, தென்மலை, செண்டுவாரை, லட்சுமி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் நேற்று மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது. இதனால் அதிகாலையில் தேயிலை தோட்டங்கள் மற்றும் புல் மேடுகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டன. இந்த சீசனில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை இதுவாகும். மேலும் அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவும் உள்ளது.

மூணாறு நகர், கன்னிமலை, செண்டுவாரை, சொக்கநாடு, பாம்படும் சோலை, லட்சுமி போன்ற இடங்களில் மைனஸ் 1 டிகிரியாக இருந்தது. பாம்பாடும் சோலை, கன்னிமலை, லாக்காடு, தேவிகுளம் ஓடிக்கை போன்ற பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. 4 நாட்களுக்கு பிறகு குளிர் மைனஸ் டிகிரியானதால் பகல் நேரங்களில் வெப்பமும் அதிகரித்துள்ளது. இதையடுத்து இதனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மூணாறுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் அங்கு சுற்றுலாவை நம்பி உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.