BJP Protest In Chennai: இந்து கோயில்கள் இடிப்பு, இந்து சமயஅறநிலைத்துறைக்கு கண்டனம் ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில், உண்ணாவிரத போராட்டத்தை முடித்துவைத்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
அதில்,”இந்து சமய அறநிலைத்துறை கருப்பு பெட்டியை போல் இயங்கிக்கொண்டிருக்கிறது. கோயில்களில் நடக்கும் பிரச்சனையை வெளிப்படுத்துவதற்காக அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அமைச்சர்களும் அதிகாரிகளும் மிச்சர் சாப்பிடுவதற்கும், டாய்லெட் சீட் மாத்துவதற்கும் கோயில் உண்டியலிருந்து பணம் எடுத்து செலவிடப்படுகிறது. தமிழகத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லாத ஆணி.
மாடுகள் திருட்டு
திருச்செந்தூரில் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட 5,309 மாடுகளை காணவில்லை. இந்து சமய அறநிலையத்துறை மாடுகளை திருடுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஜாதியை வைத்து அரசியல் செய்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே, இந்து சமய அறநிலையத்துறை நீக்குவதே.
உடையலூரில் ராஜராஜ சோழன் சமாதி கேட்பாடற்று இருக்கிறது. நீங்கள் மிச்சர் சாப்பிடும் காசில் சமாதி கட்டலாமே. அமைச்சர் சேகர்பாபு உங்களுக்கு அதற்கு மனமில்லை” என்றார். முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணியில் உள்ள அதிமுகவும், பாஜகவும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதிமுகவின் இரு தரப்பினரும் நேற்று அண்ணாமலையை, தி. நகரில் உள்ள கமலாலயத்தில் சந்தித்து பேசினர். இருப்பினும், இடைத்தேர்தலில் யார் போட்டியிடப்போகிறார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை.