மூத்த ஸ்டன்ட் இயக்குனர் ஜூடோ கே.கே ரத்தினம் மறைவு

தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுக்கு மேலாக தனது அதிரடியான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்த மூத்த ஸ்டன்ட் இயக்குனர் ஜூடோ கே.கே ரத்தினம்(93) வயதுமூப்பால் காலமானார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் ஜூடோ ரத்தினம். 1959ல் தாமரைக்குளம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமான இவர் 1966ல் வல்லவன் ஒருவன் படம் மூலம் ஸ்டன்ட் இயக்குனராக மாறினார். அந்தக்கால சிவாஜி தொடங்கி ஜெய்சங்கர், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் அனேக நடிகர்களின் படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் இன்னும் சில மொழிகளிலும் ஏறக்குறைய 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி உள்ளார். கடைசியாக சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடித்த தலைநகரம் படத்தில் வில்லனாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள ஸ்டன்ட் இயக்குனர்கள் விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன், தளபதி தினேஷ், ஜாக்குவார் தங்கம், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலரும் இவரிடன் பணியாற்றி உள்ளனர். ரஜினிக்கு மட்டும் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்துள்ளார். அதேப்போன்று கமலின் நிறைய படங்களுக்கும் இவர் ஸ்டன்ட் அமைத்துள்ளார்.

சென்னையில் வசித்து வந்த இவர் பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கி தனது சொந்த ஊரான குடியாத்தம் தரணம்பேட்டையில் வசித்து வந்தார். சமீபத்தில் வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இவரது உயிர் இன்று(ஜன., 26) பிரிந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அஞ்சலிக்கு ஏற்பாடு
மறைந்த ஜூடோ கே.கே ரத்தினத்தின் உடல் சென்னை கொண்டு வரப்படுகிறது. அங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு சனிக்கிழமை அன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.