திருப்பூர்: திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் திலகர் நகரில் தமிழக பின்னலாடை தொழிலாளரை வடமாநிலத் தொழிலாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் துரத்தி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
திருப்பூர் மாநகரத்துக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், ஆத்துப்பளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2000-த்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனங்களில் ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், பணி செய்து வருகின்றனர். தமிழர்களை விட, வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பேர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
அனுப்பர்பாளையம் – வேலம்பாளையம் செல்லும் சாலையில் திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள், தமிழக தொழிலாளர் ஒருவரை விரட்டி விரட்டி பெல்ட், கட்டை, உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வட மாநிலத் தொழிலாளர்கள் கூட்டமாக, தமிழகத் தொழிலாளர் ஒருவரை தாக்குவது குறித்து தகவல் அறிந்த வேலம்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பேக்கரியில், சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தபோது, வடமாநில தொழிலாளுக்கும், தமிழக தொழிலாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடமாநிலத் தொழிலாளர், தன்னுடன் வேலை செய்யும் சக வட மாநிலத்தவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தாக்க வந்தது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றுள்ளனர்.