கடந்த 10 நாட்களில் அதானி குழும பங்குகள் மதிப்பு ரூ.10.28 லட்சம் கோடி சரிந்தது

புதுடெல்லி: அதானி குழும பங்குகளின் மதிப்பு கடந்த 10 நாளில் ரூ.10.28 லட்சம் குறைந்துள்ளது. அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலதிபர் கவும் அதானியின், அதானி குழுமம் பங்கு சந்தையல் வரலாறு காணாத வகையில் ரூ.17.80 லட்சம் கோடி மோசடி செய்ததாக ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை, அதானி எண்டர்பிரைசஸ், அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், அம்புஜா சிமெண்ட் ஆகியவற்றை பங்கு சந்தையின் குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் கொண்டு வந்தது. இந்நிலையில், பங்குகளை கையாளுதல் மற்றும் வங்கி கணக்கு மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை அமெரிக்க பங்கு சந்தையில் டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீட்டிலிருந்து வரும் 7ம் தேதி முதல் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டவ் ஜோன்ஸ் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அதானி குழும பங்குகள் இந்திய பங்கு சந்தைகளில் நேற்றும் கடும் சரிவை சந்தித்தது. கடந்த 10 நாளில் அதானி குழும பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.10.28 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி குழுமத்துக்கு  எஸ்பிஐ வங்கி ரூ. 27,000 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. இந்நிலையில், இது குறித்து எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா கூறுகையில், `அதானி துறைமுக நிறுவனம் முதல் நிலக்கரி நிறுவனம் வரை, கடன் கடிதங்கள் மற்றும் வங்கி உத்தரவாதங்களின் செயல்பாடுகள் அடிப்படையிலேயே கடன் வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு கடனும் பங்குகள், கடனீட்டு பத்திரங்களின் மூலம் வழங்கப்படவில்லை. இதனால் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள கடனை திருப்பி பெறுவதில் எஸ்பிஐ.க்கு எந்த சிக்கலும் இல்லை,” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.