“நாடாளுமன்றத்தில் பொய்களை அவிழ்த்துவிட்ட கனிமொழி" – பட்டியலிட்ட அண்ணாமலை அறிக்கை

நாடாளுமன்ற அவையில் பேசிய திமுக எம்.பி கனிமொழி பாஜக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவரின் பேச்சுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தற்போது பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தி.மு.க. அரசியல்வாதிகள், தங்கள் கட்சிக் கூட்டங்கள் என்று கருதி, பொய்களைப் பரப்புவதற்கும், உண்மைகளை திரித்துக் கூறுவதற்கும், நாடாளுமன்ற அரங்கைப் பயன்படுத்துவது வழக்கம். தி.மு.க எம்.பி கனிமொழி, மக்களவையில் தனது கட்சியின் நீண்டகால வழக்கத்தையே பின்பற்றியிருப்பதில் ஆச்சரியமில்லை.

கனிமொழி

உதாரணமாக, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்குவதில் திமுக-வின் பங்கு என்னென்ன என்றெல்லாம் பேசியிருக்கிறார் கனிமொழி. உண்மையில் திமுகவின் பங்கு என்னென்ன…. சமீபத்தில் புதுக்கோட்டையில் பட்டியலின சகோதர, சகோதரிகள் பயன்படுத்தும் குடிநீரில், மனித மலம் கலந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். பல மாதங்கள் கடந்தும், தமிழக அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அமைச்சர் ஒருவர் பொது மேடையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து பிரதிநிதி ஒருவரை, சாதியின் பெயரைக் கூறி இழிவுபடுத்தியதைக் கண்டோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின கிராம பஞ்சாயத்துப் பிரதிநிதிகள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது கொடிகளை ஏற்றவிடாமல் தடுப்பது, திமுக ஆட்சியில் தொடர்கதை ஆகியிருக்கிறது. திமுக மக்களவை எம்.பி ஆ. ராஜாவின், பட்டியல் இன சகோதர சகோதரிகள் பற்றிய பேச்சு, தேசிய அளவில், மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியதைக் கண்டோம். திமுக மக்களவை எம்.பி டி.ஆர் பாலு, இந்து கோவில்களை இடிப்பதில் பெருமையடைகிறார். மற்றொரு தி.மு.க எம்.பி-யான தயாநிதி மாறனுடன் சேர்ந்து, கடந்த காலங்களில் அவர், தாங்கள் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தப்பட்டதாகக் கூறி கலகம் செய்தார்.

மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி

சமீபத்தில், சேலத்தில் ஒரு தி.மு.க. பிரமுகர், ஒரு இளைஞரை சாதிய ரீதியாக அவதூறாகப் பேசியதும், அவரை கோயிலுக்குள் நுழைய விட மறுப்பதும் கண்டோம். இது போன்ற கடந்த 20 மாதங்களில், தி.மு.க-வின் சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் சாதனைகள் பட்டியல், ஒரு பத்திரிகையின் 20 பக்கங்களை நிரப்பும்.

ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் :

20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தாமதப்படுத்துவதாகக் கூறியிருக்கிறார் கனிமொழி. கடந்த வாரம் வரை 15 ஆக இருந்த எண்ணிக்கையை, அவரின் சகோதரரான தமிழக முதல்வர் தற்போது 20 ஆக உயர்த்தியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக பா.ஜ.க, ஏற்கனவே ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, நிலுவையில் உள்ள மசோதாக்கள் விவரம் குறித்து தெளிவுபடுத்தியிருந்தது. நிலுவையில் உள்ள அந்த 15 மசோதாக்களில், தமிழக முதல்வர் தன்னைத் தானே பல்கலைக்கழக வேந்தராக நியமித்த 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

ஆளுநர் ஆர்.என்.ரவி

அரசாங்கத்திற்கு தேவையற்ற அதிகாரங்களை வழங்கும் கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் திருத்தம் தொடர்பான ஒரு மசோதா. எந்தவொரு தனியார் கல்லூரியையும் கையகப்படுத்த விரும்பும் தமிழக அரசாங்கத்தின் விதியை திருத்தும் ஒரு மசோதா. ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான ஒரு மசோதா. மத்திய அரசு நுழைவு பட்டியலில், உள்ள ரம்மி தடை சட்டத்தை தமிழக அரசு எவ்வாறு நிறைவேற்றியது என்ற தமிழக ஆளுநரின் கேள்விக்கு தமிழக அரசு பதில் அளித்து விட்டதா என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். கனிமொழி அவர்கள் உள்ளிட்ட தி.மு.க எம்.பி-க்கள், முரசொலியை மட்டும் படிக்காமல், கடந்த காலங்களில் இந்த உண்மைகளை வெளியிட்ட மற்ற செய்தித்தாள்களையும் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

திருக்குறள் குறித்து:

நாடாளுமன்ற உரைகளில், திருக்குறளைக் குறிப்பிடுவதில்லை என்று பா.ஜ.க மேல் குற்றச்சாட்டு வைக்கிறார் கனிமொழி. காசி தமிழ்ச் சங்கத்தின் போது, பிரதமர் மோடி, திருக்குறளை 13 மொழிகளில் வெளியிட்டார். சமீபத்தில் முடிவடைந்த தேர்வும் தெளிவும் நிகழ்ச்சியில், பிரதமர் தமிழ் மொழியைப் புகழ்ந்திருந்தார் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். இதற்கிடையில், திருவள்ளுவர் சிலையை விட ஒரு அடி அதிக உயரமுள்ள பேனா சிலையை வைக்க, தனது கட்சி ஏன் விரும்புகிறது என்பதை விளக்குவதற்கு கனிமொழி முன்வருவாரா…

மெரினா கடலில் பேனா சிலை

உலக பசி குறியீடு:

தி.மு.க எப்போதுமே தங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல், மேற்குலகில் நம்பிக்கை வைப்பது போல, கனிமொழி, அயர்லாந்து மற்றும் ஜெர்மனியில் இருந்து NGO க்கள் வெளியிட்ட உலக பசி குறியீடு – அட்டவணையில் நம்பிக்கை வைத்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. வெறும் 3000 பேரிடம் மட்டுமே கணக்கு எடுக்கப்பட்ட, தவறான தரவுகளால் உருவாக்கப்பட்ட அந்த அட்டவணை, நமது மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. கோவிட் தொற்றுநோய்களின் போது தீவிர வறுமை அதிகரிப்பதைத் தடுத்த, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை IMF பாராட்டியதை தி.மு.க எம்.பி-க்கள் வசதியாக மறந்துவிட்டனர்.

கனிமொழி இத்துடன் நின்று விடவில்லை. தங்கள் கட்சியின் பொய்கள் மற்றும் திரித்த உண்மைகளின் வரிசையில், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். ஆனால், அவரின் கட்சியோ, TNPSC தேர்வு முடிவுகளை வெளியிட முடியாமல் திணறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்த தி.மு.க, அதை மறந்து விட்டது. தமிழக அரசில், இளைஞர்களுக்கு 5.5 லட்சம் வேலை வழங்குவதாக தி.மு.க வாக்குறுதி அளித்தது. அதைப் பற்றிய எந்தச் செய்தியும் இல்லை. ஜூன் 2022-ல், பிரதமர் மோடி, நமது நாட்டின் இளைஞர்களுக்கு மத்திய அரசில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே 2.17 லட்சம் இளைஞர்களுக்கு வேலைக்கான ஆணைக் கடிதங்களை வழங்கியுள்ளார்.

திரௌபதி முர்மு

பழங்குடியினர் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்ற கனிமொழியின் பேச்சை, நமது நாட்டின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவர், திரௌபதி முர்முவே ஏற்றுக்கொள்ள மாட்டார். சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு என்ற திமுக எம்.பிக்களின் வழக்கமான திசை திருப்பும் உரைகளை விட்டு விட முடியாது. பின்வருவனவற்றிற்கு விளக்கமளிக்க, கனிமொழியை கேட்டுக்கொள்கிறோம். தி.மு.க, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த காலமான 2006 – 2014, 8 ஆண்டுகளில் செம்மொழிகளின் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு சமஸ்கிருதத்திற்கு ரூ 675.36 கோடியும், தமிழுக்கு ரூ75.05 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஏன் இந்த வித்தியாசம் என்பதை, தி.மு.க தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும்.

இறுதியாக, தி.மு.க எம்.பி கனிமொழி, 2023-24 -ம் ஆண்டில் தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களில் குறைவான ஒதுக்கீடு என்று புகார் கூறியிருக்கிறார். ஆனால், 2023-24 ஆண்டில், தமிழகத்திற்கான ரயில்வே பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக் காலத்தில் ஒதுக்கப்பட்ட சராசரியை விட, ஏழு மடங்கு அதிகம். தமிழகத்தில் தற்போது ரூ.30,961 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை

கடந்த ஆண்டு, பட்டியலின சகோதர, சகோதரிகளின் நலனுக்காக, 13 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் தமிழக அரசு செலவிடவில்லை என்பது குறித்து தமிழக பா.ஜ.க சார்பில் கேள்வி எழுப்பியிருந்தோம். தமிழக அரசிடம் இருந்து, இன்னும் எங்களுக்குப் பதில் வரவில்லை. இவை அனைத்துக்கும் கனிமொழி, தகுந்த பதிலளிப்பார் என்று நம்புகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.