நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கியதில் பெண் படுகாயமடைந்தார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உல்லத்தட்டி பகுதியை சேர்ந்தவர் மணியக்கா(50). இவர் நேற்று காலை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அருகே இருந்த புதரில் இருந்த காட்டெருமை ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த மணியக்காவை காட்டிரும்பு கொம்பால் முட்டி தள்ளியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மணியக்கா பலத்த காயமடைந்தார். இதையடுத்து மணியக்காவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பகுதியை சேர்ந்தவர்கள் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், வனவிலங்கு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.