5-வது நாளாக மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள்; சமாதானக் கூட்டத்தில் கண்ணாடியை உடைத்த சார் ஆட்சியர்!

தூத்துக்குடி, விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 240  விசைப்படகுகள் கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் படகுகளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், மீன்பிடித் தொழிலில் வரும் லாபம் மற்றும் நட்டத்தில் உரிமையாளர்களுக்கு 61 சதவிகிதம், தொழிலாளர்களுக்கு 39 சதவிகிதம் என்ற அடிப்படையில் பங்கு பணம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதில், கூடுதலாக வட்ட தொகை என்ற பெயரில் உரிமையாளர்கள் ஒவ்வொரு படகிலும் 10 சதவிகிதம் முதல் 14 சதவிகிதம் வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய பணத்தில், பிடித்தம் செய்வதாகக் கூறப்படுகிறது.

உடைக்கப்பட்ட மேசைக் கண்ணாடி

இவ்வாறு வட்டப் பணம் என்ற பெயரில் அதிக அளவு பணம் வசூல் செய்யப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக விசைப்படகு மீன்பிடித் தொழிலாளர்கள் கூறுகிறார்கள். `6 சதவிகிதம் மட்டுமே வட்டப் பணம் பிடிக்க வேண்டும். வாரத்தில் 6 நாள்களும் மீன்பிடித் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மீன்வளத்துறை அதிகாரிகள் தலையிட்டு விசைப்படகு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டுமென 10 நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், மீன்வளத்துறை அதிகாரிகள், விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் விசைப்படகு தொழிலாளர் சங்கத்தினரிடையே  எந்தவிதப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படாததால் விசைப்படகு தொழிலாளர் சங்கத்தினர், தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை கடலுக்குச்  செல்வதில்லை என்று முடிவெடுத்து, கடந்த 5 நாள்களாக கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் சலசலப்பு

இந்த நிலையில், விசைப்படகு தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தூத்துக்குடி சார் ஆட்சியர் கெளரவ் குமார் தலைமையில், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார், மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில், விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் விசைப்படகு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் சமாதானக்கூட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விசைப்படகு தொழிலாளர்களின் கோரிக்கைகள், உரிமையாளர்களின் கோரிக்கைகள் கூட்டத்தில் குறித்துப் பேசப்பட்டது.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் ஏற்பட்ட அதிகப்படியான சலசலப்பை கட்டுப்படுத்தி, அமைதிப்படுத்த போலீஸார் முற்பட்டனர்.  அப்போது திடீரென தூத்துக்குடி சார் ஆட்சியர் கெளரவ் குமார் கோபத்தில் மேசையை டம் டம் எனத் தட்டினார். இதில், மேசைக் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது. இதையடுத்து விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள்  திகைத்துப் போய் நின்றனர்.

வெளியேறிய மீனவரகள்

இறுதி வரையிலும் கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. ”எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லப்போவதில்லை” என்றனர் விசைப்படகு தொழிலாளர்கள். “சார் ஆட்சியர், எங்களது கோரிக்கையை எடுத்துச்சொல்லி தீர்வு சொல்லுவார் எனப் பார்த்தால், நிர்வாகத்தில் உள்ள அவர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கோபத்தில் கண்ணாடியை உடைத்துவிட்டாரே” எனச் சொன்னபடியே கலைந்து சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.