பொதுமக்கள் போராட்டம் 200வது நாளை எட்டியது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்று வட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி சென்னையின் 2வது விமான நிலையமான, பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என ஒன்றிய, மாநில அரசுகள் அறிவித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலம் எடுப்பு பணிகளை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் நோக்கி கிராம மக்கள் கிராம உரிமை மீட்பு பேரணியை நடத்தினர்.

ஏகானாபுரம் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கிய இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்களோடு துவங்கிய பேரணியை அம்பேத்கர் திடல் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். பேரணியில் பங்கேற்றவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தலைமை செயலகத்தில் துறை அமைச்சருடன் சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்து பேச்சு வார்த்தை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

அதனால் போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்தனர். இதையடுத்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அந்த போராட்டம் இன்றுடன் 200 நாட்களை எட்டியது. இந்த 200வது நாள் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ பேசினார். இதனால் சட்டம்- ஒழுங்கு காக்க எஸ்பி சுதாகர் தலைமையில் 7 ஏடிஎஸ்பி, 28 டிஎஸ்பி, 42 இன்ஸ்பெக்டர்கள், 81 எஸ்ஐகள் உள்ளிட்ட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.