தமிழகம் வரும் பீகார் அதிகாரிகள்: நிதீஷ் குமார் சொன்ன தகவல்!

தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ திருப்பூர் பகுதிகளிலும், பீகாரிலும் பரப்பப்படுகிறது. பீகார் சட்டப் பேரவையில் இந்த வீடியோவை காட்டி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, பரப்பப்படும் அந்த குறிப்பிட்ட வீடியோ போலியானது என்று தெரிவித்துள்ளார். மேலும் போலியான தகவல்களை பரப்பினால் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசும் விளக்கம் அளித்துள்ளது. வடமாநில தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் திருப்பூர் எஸ்.பி அலுவலகத்தில் வட மாநில பாதுகாப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய நான்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அதிகாரிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுவார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.