உத்திரபிரதேசம், ஜகர்காண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வட மாநிலத்தோர் கோவையில் உள்ள பஞ்சாலைகள், சிறு குறு தொழிற்சாலைகள், உணவகங்கள், கட்டிடம் கட்டும் பணியில் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பூர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் சஞ்சீவ் குமார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் திருப்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட போலீசார், சஞ்சீவ் குமார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
இதனிடையே, ரயில்வே காவல் நிலையம் முன்பு குவிந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சஞ்சீவ் குமாரின் செல்போன் உள்ளிட்டவற்றை காணவில்லை எனவும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் குற்றஞ்சாட்டினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
வடமாநிலத் தொழிலாளியின் மரண விவகாரத்தில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் திருப்பூர் மாநகரக் காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா கேட்டுக் கொண்டார். திருப்பூரில் அனைத்துத் தரப்பு தொழிலாளர்களுக்கும் முழு பாதுகாப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் விஷமத்தனமான செய்திகள் பரப்பப்பட்டுவருவதாக கூறினார். தவறான உள்நோக்கத்தோடு விஷம பிரசாரத்தை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.