மதுப் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்: தமிழ்நாட்டில் வரப்போகும் ‘தண்ணி’ தட்டுப்பாடு?

டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு மதுவகைகளை ஏற்றிச் செல்லும் வாகன ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் மது வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கிடங்குகளிலிருந்து மதுவகைகளை ஏற்றிச் சென்று டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகிக்கும் பணிகளுக்கு டெண்டர் விடப்படும். யார் குறைவான தொகைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு டெண்டர் வழங்கப்படும். அவர்கள் தங்கள் வாகனங்களில் இந்த விநியோகப் பணியை மேற்கொள்வார்கள்.

ஆனால் இம்முறை வெளிப்படையாக டெண்டர் விடப்படாமல் அமைச்சர் ஒருவருக்கு வேண்டிய ஆள்களுக்கு இந்த பணிகள் வழங்கப்பட திட்டம் தீட்டப்படுவதாக வாடகை ஒப்பந்ததாரர்கள் புகார் கூறுகின்றனர்.

அம்பத்தூர், திருமழிசை போன்ற இடங்கள் உட்பட 14 மாவட்டங்களில் உள்ள மதுபான கிடங்குகளில் இருந்து மதுபான கடைகளுக்கு மதுவகைகளை ஏற்றி செல்லும் வாடகை ஒப்பந்ததாரர்களிடம் 3 மாத வாடகை தொகையை நிலுவையில் வைத்துள்ளனர். நாளை நடைபெற உள்ள டெண்டரில் கலந்து கொள்ள இயலாத நிலையை உருவாக்குவதாகவும் கூறுகின்றனர்.

எனவே வாடகை ஒப்பந்தரார்கள் மது வகைகளை விநியோகம் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் உள்ள மது கடைகளில் மது வகைகள் கிடைக்கப் பெறாமல் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக சொல்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.