வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலிருக்கும் டி.பி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலு. இவர் தனக்குச் சொந்தமான நிலத்தை அளந்து, அதற்கான வரைப்படம் வழங்கக் கோரி குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். நிலத்தை அளவீடு செய்ய சர்வேயர் விஜய்கிருஷ்ணா ரூ.15,000 லஞ்சம் கேட்டிருக்கிறார். லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி வேலு, அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகாரளித்தார். இதையடுத்து, சர்வேயரை கையும் களவுமாகப் பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், ரசாயனம் தடவிய 500 ரூபாய் தாள்களை விவசாயி வேலுவிடம் கொடுத்து அனுப்பினர்.

இன்று மதியம் இரண்டு மணியளவில், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு சர்வேயரை சந்திக்கச் சென்றார் வேலு. கையில் பணத்தை வாங்க மறுத்த சர்வேயர் விஜய்கிருஷ்ணா, அந்தத் தொகையை இடைத்தரகராகச் செயல்படும் தனது உதவியாளர் கலைவாணன் என்பவரிடம் கொடுக்குமாறு கூறியிருக்கிறார். அதன்படி, கலைவாணனிடம் சென்று பணத்தை கொடுத்தார் வேலு. கலைவாணன் பணத்தை வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், கலைவாணனைக் கைதுசெய்தனர். இதையடுத்து, சர்வேயர் விஜய்கிருஷ்ணாவையும் கைதுசெய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். இந்தக் கைது சம்பவத்தால், குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.