சூப்பர் ஓவரில் அசத்திய தீக்ஷனா…முதல் டி20 போட்டியை கைப்பற்றிய இலங்கை…!

ஆக்லாந்து,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இழந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி குசல் பெரேரா மற்றும் அசலங்கா ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது.

அந்த அணியில் சாட் பவுஸ் 2 ரம். டிம் செய்பர்ட் 0 ரன், அடுத்து வந்த டாம் லதாம் 27 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து டேரில் மிட்செல் மற்றும் மார்க் சாம்பென் ஆகியோர் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய மிட்செல் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டை ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தேர்வு செய்ய சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் ஆடியது. இலங்கை அணிக்காக சூப்பர் ஓவரை மகேஷ் தீக்ஷனா வீசினார். அவர் அதில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதையடுத்து 6 பந்தில் 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் புகுந்தது. அந்த அணி 3 பந்தில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறையில் இலங்கை அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.