திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொட்டியூர் அருகே உள்ள கேளகம் பகுதியைச் சேர்ந்தவர் லிஜோ ஜோஸ் (33). அவரது மகன் நெபின் ஜோசப் (6). நேற்று லிஜோ ஜோஸ் தனது மகனுக்கு நீச்சல் சொல்லிக் கொடுப்பதற்காக அருகில் உள்ள ஆற்றுக்கு அழைத்துச் சென்றார்.
ஆற்றில் ஒரு தற்காலிக தடுப்பணை உள்ளது. அந்த பகுதியில் வைத்து லிஜோ தனது மகனுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத நெபின் ஜோசப் சகதியில் சிக்கிக்கொண்டான். உடனே அவனை காப்பாற்ற லிஜோ ஜோஸ் முயற்சித்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக அவரும் சகதியில் சிக்கிக்கொண்டார். 2 பேரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த பகுதியினர் விரைந்து சென்றனர். பின்னர் 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லிஜோ ஜோசும், நெபின் ஜோசப்பும் பரிதாபமாக இறந்தனர்.