செயலிழந்த உறுப்புகள்: கவலைக்கிடமான நிலையில் நடிகர் சரத் பாபு

1977ம் ஆண்டு ‛பட்டினப்பிரவேசம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சரத் பாபு. இவர் நிழல் பார்க்கிறது, வட்டத்துக்குள் சதுரன், முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார்.

குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்களில் நண்பர் கேரக்டர் என்றாலே தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் முதல் சாய்ஸ் சரத் பாபு தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் சரத் பாபு நடித்திருக்கிறார். 72 வயதாகும் சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாக 200 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சரத் பாபு கடந்த மாதம் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், உடல் உறுப்பு நோய் அழற்சி பிரச்னை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரது உடல் நிலை பின்தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் அவர் பாதிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்து, கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.