இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள்கள் பயணமாக இன்று இந்தியாவுக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், “இந்திய மீனவர்களின் பாரம்பர்ய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திடவும் இலங்கை அதிபரை வலியுறுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுக்கும் வகையில், மத்திய அரசு இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும்” என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார். இதற்குப் பதிலளிக்கு விதமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் முழுக்க முழுக்க, கடந்தகால காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி ஆட்சியின் தவறுகளை வெளிப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலம். காங்கிரஸ், தி.மு.க கூட்டணி ஆட்சியின் தவறுகளைச் சரிசெய்ய, பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்கு, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க சார்பில் நன்றி. இலங்கையில், தமிழ் சகோதர சகோதரிகள் கொத்துக் கொத்தாகக் கொலைசெய்யப்பட்டபோது, இங்கே காங்கிரஸ் கூட்டணியில் பசையான மத்திய அமைச்சர் பதவியை வாங்க டெல்லிக்குப் பறந்தவர்கள், ஏதோ கடிதங்கள் எழுதியே பிரச்னைகளைத் தீர்த்து விட்டதைப்போல இன்று பெருமையடித்துக் கொண்டிருப்பது நகைக்கத்தக்கது.
தி.மு.க ஆட்சியில், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது, பா.ஜ.க தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழகத்தில் அன்று ஆட்சியிலிருந்த தி.மு.க, அந்த வழக்குக்குத் தேவையான ஆவணங்களைக்கூட நீதிமன்றத்தில் வழங்காமல், கச்சத்தீவு, நம் கைவிட்டுச் செல்லக் காரணமாக இருந்தது. அதன் பின்னர் தி.மு.க பல முறை, பல கட்சிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டணியில் இருந்து, மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும், கச்சத்தீவை மீட்க உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கச்சத்தீவைத் தாரைவார்த்த தி.மு.க கும்பலுக்கு, கச்சத்தீவு பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது… முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தினர் மத்திய அமைச்சர் பதவி வாங்க, தமிழர்களின் நலனை அடகு வைத்த அதே காலத்தில், அன்றைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி 2009-ம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இலங்கையில் தமிழ் மக்கள் தாக்கப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து, அதைக் கண்டும் காணாமல் இருக்கும் காங்கிரஸ், தி.மு.க கட்சிகளைக் கடுமையாகக் கண்டித்தார்.
இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசை வலியுறுத்தியவர். உங்களைவிட, தமிழ் மக்கள்மீது மிகுந்த அன்பு கொண்டவர் பிரதமர் மோடி. இலங்கைத் தமிழர்களுக்கு 51,000 வீடுகள், அவர்களுக்கானத் தொழிற்கூடங்கள் அமைப்பு, தமிழர் பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை, இலங்கையின் மற்ற பகுதிகளை இணைக்கும் வண்ணம் சாலை, ரயில் போக்குவரத்து வசதிகள், காங்கேசன்துறை துறைமுகத்தை தமிழகத்துடன் இணைக்க கப்பல் வசதி, யாழ்ப்பாண தமிழ் கலாசார மையம், சென்னையிலிருந்து விமானப் போக்குவரத்து வசதி என, இலங்கைத் தமிழர்கள் வாழ்வு மேம்பட பிரதமர் மோடி செய்திருக்கும் நலப்பணிகள் ஏராளம்.

இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை வழங்கும் 13-ம் சட்டத்திருத்தம் கொண்டு வர, பிரதமர் மோடி இரண்டு முறை வலியுறுத்தியிருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த ஜனவரி மாதம் இலங்கைப் பயணத்தின் போதும் 13-ம் சட்டத்திருத்தம் கொண்டு வர வலியுறுத்தியிருக்கிறார். விரைவில் அது அமலுக்கு வரும் என்றும் உறுதி தெரிவித்திருக்கிறார். இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்படுவது குறித்து நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, மீனவர்கள் கைதுசெய்யப்பட்டால், இந்திய அரசின் வெளியுறவுத்துறை துரிதமாகச் செயல்பட்டு, மீனவர்களுக்கு உடனடி சட்ட உதவிகளை வழங்கி, மீட்டுக் கொண்டு வருகிறது.
அவர்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மீனவர்கள் உயிர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவியது. மத்தியில், தி.மு.க காங்கிரஸ் கூட்டணியின் பத்தாண்டுக்கால ஆட்சியில், தமிழகத்தைச் சேர்ந்த 85 மீனவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியில், ஸ்டாலினால் அப்படி ஒரு நிகழ்வைக் குறிப்பிட முடிந்ததா… காங்கிரஸுடன் மத்திய கூட்டணி ஆட்சியிலிருந்தபோது வாளாவிருந்துவிட்டு, தற்போது பிரதமர் மோடி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உருவாக்கிய ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு கொண்டு வரும்போது, வழக்கம்போல தங்கள் ஸ்டிக்கரை ஒட்ட முயல்கிறது தி.மு.க” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.