திருவனந்தபுரம்: Vinayakan (விநாயகன்) கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உயிரிழந்த சூழலில் அவரைவிமர்சித்து விநாயகன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான உம்மன் சாண்டி கடந்த 18ஆம் தேதி உயிரிழந்தார். பெங்களூருவில் இருந்த அவர் புற்றுநோய் காரணமாக இறந்தார். அவரது இறப்பு கேரள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த மாநில மக்கள் மட்டுமின்றி பிற மாநில மக்களும் உம்மன் சாண்டியை நினைவுகூர்ந்துவருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு கோட்டயத்தில் நேற்று நடந்தது.
விமர்சனம்: எளிமையான முதலமைச்சர், யார் வேண்டுமானாலும் அவரை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என பலர் அவர் குறித்து கூறிவந்தனர். சூழல் இப்படி இருக்க நடிகர் விநாயகன் உம்மன் சாண்டி குறித்து பேசி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “உம்மன் சாண்டி என்பவர் யார். அவர் இறந்துவிட்டதால் நாங்கள் என்ன செய்ய வெண்டும். உங்களுடைய தந்தை இறந்துவிட்டார். உம்மன் சாண்டி இறப்புக்கு எதற்காக மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் அவர் நல்லவர் என சொல்லலாம். ஆனால் நான் சொல்லமாட்டேன்””என கூறியிருந்தார்.
கண்டனம்: இந்த வீடியோ பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. மேலும் விநாயகன் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தினர். அதுமட்டுமின்றி அவதூறாக பேசிய விநாயகன் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் கொச்சி உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதனை அடிப்படையாக எர்ணாகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே அவர் தனது முகநூல் பக்கத்திலிருந்து வீடியோவை நீக்கிவிட்டார்.
தாக்குதல்: இந்நிலையில் எர்ணாகுளம், கழுவூரில் இருக்கும் நடிகர் விநாயகனின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் வீட்டின் ஜன்னல்கள் சேதாரமடைந்தன. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் விநாயகன் தேவையில்லாமல் அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அவர்தான் இந்தப் பிரச்னையை ஆரம்பித்து வைத்ததாகவும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
யார் இந்த விநாயகன்?: முன்னதாக மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் நடித்த மாந்த்ரீகம் படத்தின் மூலம் அறிமுகமானவர் விநாயகன். அதப் படத்துக்கு பிறகு தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்தவர். மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். தமிழில் ஏற்கனவே திமிரு படத்தில் நடித்தார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மனைவியை பிரிந்த விநாயகன்: விநாயகன் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருப்பவர், சமீபத்தில்கூட ஒரு பெண் பத்திரிகையாளரை அவர் தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதுமட்டுமின்றி பல பெண்களுடன் அவர் உடல் ரீதியாக தொடர்பில் இருந்ததாகவும் அதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து அவரும், அவரது மனைவியும் விவாகரத்து பெற்றுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.