சென்னை: Venkat Prabhu (வெங்கட் பிரபு) விஜய்யுடன் இணைந்த பிறகு வெங்கட் பிரபுவுக்கு டிமாண்ட் ஏறிவிட்டதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகியிருக்கிறது.
தளபதி விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்திருக்கிறது. விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி விஜய் தனது போர்ஷனுக்கான டப்பிங்கை கொடுக்கவிருக்கிறார். அக்டோபர் 19ஆம் தேதி பான் இந்தியா படமாக லியோ வெளியாகவிருக்கிறது. அடுத்த மாதம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கலாம்.
விஜய் 68: லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் 68 பற்றிய பேச்சு ஆரம்பித்தது. அதன்படி அந்தப் படத்தை ஆர்.பி.சௌத்ரி தனது கம்பெனியான சூப்பர் குட் பிலிம்ஸின் 100ஆவது படமாக தயாரிப்பார் என்றும், தெலுங்கு இயக்குநர் ஒருவர் படத்தை இயக்குவார் என்றும் தகவல் வட்டமடித்தது. ஏற்கனவே தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்ததே கொடுமையாக போய் முடிந்திருக்க ஏன் இன்னொரு விஷப்பரீட்சை என அவரது ரசிகர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.
வெங்கட் பிரபு: இப்படிப்பட்ட சூழலில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெங்கட் பிரபு விஜய் படத்தை இயக்குவார் என அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் 25ஆவது படமாக இந்தப் படத்தை தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா விஜய்க்கு இசையமைத்திருக்கிறார். பில்லா, மங்காத்தாவில் எப்படி அஜித்துக்கு யுவன் மாஸ் பிஜிஎம் போட்டாரோ அதே மாதிரியான இசையை இதில் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றனர் தளபதி ரசிகர்கள்.

ஆரம்பக்கட்ட பணிகள்: வெங்கட் பிரபு தற்போது இந்தப் படத்துக்கான கதையை மெருகேற்றும் வேலையில் தனது உதவி இயக்குநர்களுடன் ஈடுபட்டிருக்கிறார். கஸ்டடி படம் தோல்வியடைந்ததால் விஜய்யை வைத்து மீண்டும் ஒரு கம்பேக் கொடுக்க வேண்டும்; அஜித்துக்கு எப்படி ஒரு மெகா ப்ளாக் பஸ்டர் கொடுத்தோமோ அதேபோல் விஜய்க்கும் கொடுக்க வேண்டும் என வெங்கட் டீம் உறுதி பூண்டுள்ளதாக தெரிகிறது. ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது. யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்
ஏறிய டிமாண்ட்: இந்நிலையில் இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் வெங்கட் பிரபுவுக்கு டிமாண்ட் ஏறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உங்களிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என இதுவரை 1000 விண்ணப்பங்கள் வெங்கட் பிரபுவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை வெங்கட் பிரபு படங்கள் பற்றிய அறிவிப்பு வந்தபோதெல்லாம் இந்த மாதிரியான விண்ணப்பங்கள் வந்ததில்லை. எனவே விஜய்யுடன் இணைந்த பிறகு அவருக்கு டிமாண்ட் ஏறியிருக்கிறது. படம் மெகா ஹிட்டாகிவிட்டால் அவருக்கு ஹீரோக்கள் மத்தியிலும் டிமாண்ட் ஏறும் என கூறுகின்றனர் திரைத்துறையினர்.