
மீண்டு, 'ரிட்டர்ன்' ஆவாரா சந்தானம்?
தமிழ் சினிமாவில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நகைச்சுவை நடிப்பில் கோலோச்சிக் கொண்டிருந்தவர் சந்தானம். டிவியிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் ஹீரோவாக வெற்றி பெற ஆரம்பித்த பின், அதே டிவியிலிருந்து வந்த சந்தானத்திற்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் 'தில்லுக்கு துட்டு' படம்தான் அவருக்கு முதல் வெற்றியைத் தந்தது. அதன் பின் வந்த படங்களில் 'தில்லுக்கு துட்டு 2' தான் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. சில படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றன. ஆனால், அவர் நடித்து கடைசியாக வெளிவந்த “சபாபதி, குலு குலு, ஏஜன்ட் கண்ணாயிரம்” ஆகிய படங்கள் படுதோல்வியைத் தான் பெற்றது.
அந்தத் தோல்வியிலிருந்து மீள வேண்டும் என்ற நம்பிக்கையில் மீண்டும் தன்னுடைய பழைய பாணியைக் கையிலெடுத்தார். 'தில்லுக்கு துட்டு 3' என வர வேண்டிய படம்தான் 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆக நாளை வெளியாகிறது. தனது பாணி நகைச்சுவையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக 'மீண்டு ரிட்டர்ன்' ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சந்தானம். அவரது நம்பிக்கை ரசிகர்களின் கையில்தான் உள்ளது.