சாதிப் பிரச்சினை என்பது தீவிரமானது. அதை சீரியஸாகவும் பேசலாம். சற்று தீவிரம் கலந்து சிரிக்கச் சிரிக்கவும் பேசலாம். இரண்டாவது அணுகுமுறையை பாக்யராஜ் கையில் எடுத்திருக்கிறார். தன்னுடைய பிரத்யேக பாணியில் பாலியல் நகைச்சுவையையும் தூவி அவர் எழுதிய படம் ‘இது நம்ம ஆளு’.
டைரக்ஷன் என்னமோ பாலகுமாரன்தான். ஆனால் படம் முழுக்க பாக்யராஜ் வாசனை. பல திரைப்படங்களுக்குச் சிறப்பான முறையில் வசனம் எழுதியிருக்கும் பாலகுமாரன் இயக்கிய ஒரே திரைப்படம் இது. ‘டைரக்ஷன் மேற்பார்வை’ என்று டைட்டிலில் பாக்யராஜின் பெயர் இருந்த நினைவு.
முதன்முதலில் இசையமைத்து ‘பச்ச மல சாமியொண்ணு’ என்று பாடலையும் பாடியிருந்தார், பாக்யராஜ். பாடகர்களின் பெயர் டைட்டிலில் வரும் போது, ‘இந்தக் குயில்களுக்கு இடையில் ஒரு காகம்’ என்று தன்னடக்கமாகச் சொல்லிக் கொண்டாலும் பாடல்கள் அனைத்தும் ‘ஹிட்’ ஆகின. அதிலும் ‘நான் ஆளான தாமரை’ பாடலுக்குத் தமிழகமே கிளுகிளுப்புடன் மெய்சிலிர்த்தது.

ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையை ஜனரஞ்சகமான அம்சம் கலந்து நிறைய நகைச்சுவையுடனும் சற்று தீவிரத்துடனும் சொல்ல பாக்யராஜால் மட்டுமே இயலும். நகைச்சுவையின் மூலம் எதையும் மழுப்பி விடலாம். அதே சமயத்தில் சொல்ல வந்த செய்தியையும் வாழைப்பழ ஊசியாக அழுத்தமாகச் சொல்லி விடலாம். அப்படி அவர் சொல்லியடித்த கில்லியான திரைப்படம்தான் ‘இது நம்ம ஆளு’. தன்னுடைய சாதியைச் சேர்ந்தவரை மட்டுமல்லாமல் மனிதர்கள் அனைவரையுமே ‘இது நம்ம ஆளு’ என்று சொல்லிப் பழகுங்கள் என்பதே இந்தப் படத்தின் மூலம் அவர் சொன்ன செய்தி.
பெருமளவு சிரிப்பும் சற்று சீரியஸூம் கலந்த திரைக்கதை
பட்டப்படிப்பு படித்திருக்கும் கோபால் சரியான வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறான். அம்மாவின் கண் அறுவைச் சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுவதால் நகரத்திற்கு வருகிறான். கடுமையான பசியுடன் சில நாள்கள் கழிகின்றன. பிராமண வேஷம் போட்டால் வேலை கிடைக்குமென்று தெரிய வருகிறது. கோபால் முதலில் ஒப்புக் கொள்வதில்லை. பிறகு வேறு வழியின்றி அந்த வேடத்தை அவன் அணிய, அதிலேயே நீடிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அவன் வேஷதாரி என்பதறியாமல் உண்மையான பிராமணன் என்று கருதும் பானு காதலில் விழுகிறாள். அதிலிருந்து ஒதுங்கிப் போக கோபால் நினைத்தாலும் சூழல் அமைவதில்லை. கோபாலின் நற்குணங்கள் காரணமாகத் திருமணம் நடக்கிறது.

திருமண நாளன்றுதான் கோபால் பிராமணன் அல்ல என்கிற விஷயம் அம்பலமாகிறது. பானுவின் தந்தை ஊரே மதிக்கும் வேத பண்டிதர். அதிர்ச்சியும் ஆத்திரமும் அடையும் அவர் ‘என் பெண்ணைத் தொடக்கூடாது’ என்று கோபாலிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறார். பானுவைத் தலைமுழுகி ‘மகள் அல்ல’ என்றும் அறிவிக்கிறார். மாமனார் மீதுள்ள மரியாதை காரணமாகத் தான் செய்து தந்த சத்தியத்தைத் தீவிரமாகப் பின்பற்றுகிறான் கோபால்.
வீட்டை விட்டு வெளியேறும் பானு, கணவனின் வீட்டின் எதிரேயே தங்குகிறாள். கோபாலின் மனதை மாற்ற முயல்கிறாள். ஆனால் தீவிர பிரம்மச்சரியத்தை கோபால் கடைப்பிடிக்கிறான். அவனுடைய பெற்றோருக்கு தங்கள் வம்சம் பெருக வேண்டுமென்கிற ஆசை. அதற்கான நெருக்கடியைத் தருகிறார்கள். மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்கிறார்கள்.
`முடிவு என்னவானது? சாஸ்திரியின் மனம் மாறியதா? கோபாலும் பானுவும் இணைந்தார்களா?’ பெருமளவு நகைச்சுவையும் சற்று தீவிரமுமான கலவையுடன் அமைந்த திரைக்கதையில் இதைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் பாக்யராஜ். (டைரக்ஷன்: பாலகுமாரன்).

வேஷ பிராமணனாக அமர்க்களப்படுத்திய பாக்யராஜ்
தன் இமேஜிற்கு ஏற்ற வகையில் பாத்திரத்தை எழுதிக் கொள்வதில் பாக்யராஜ் சமர்த்தர். எனவே ‘கோபால்’ என்கிற பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். சற்று அசட்டுத்தனம், நிறைய புத்திசாலித்தனம், அவசியமான இடங்களில் வீரம், விவேகம் என்கிற கலவையில் பார்வையாளர்களின் மனதில் இடம்பிடித்து விடுகிறார். சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும் யாருக்கும் வலிக்காமல் அதைச் சாமர்த்தியமாக சொல்லி விடுவதில் ஆள் கெட்டி.
பசியால் வாடினாலும் பிராமண வேஷம் போட மறுக்கும் கோபாலின் நேர்மை ஆரம்பத்திலேயே நமக்கு உணர்த்தப்பட்டு விடுகிறது. பிறகு வேறு வழியில்லாமல் அதில் இறங்கும் கோபால், ‘ஸ்வாஹா’ சொன்னால் போதும் என்று சொல்லும் புரோகிதர்களின் கூட்டத்தில் ஐக்கியமாக முயலும் காட்சிகள் எல்லாம் ரணகளமான நகைச்சுவை. மற்றவர்கள் சாலையில் கிடக்கும் பூசனிக்காயை விட்டுத் தள்ளி வரும் போது இவர் மட்டும் ஸ்டைலாக துள்ளிக் குதித்துத் தாண்டி வருவது கண்கொள்ளாக் காட்சி. இதைப் போலவே ‘கோமியம்’ என்றால் என்னவென்று அறியாமல் ஷோபனாவிடம் அதைத் தரச் சொல்லிக் கேட்பது சுவாரஸ்யமான காட்சி.

அப்பாவியான பாக்யராஜைக் கண்டு ஷோபனா காதலில் விழுவதும், தன்னுடைய நிலைமை கருதி பாக்யராஜ் ஒதுங்கி ஒதுங்கிச் செல்வதும், அவர் உள்ளுக்குள் காதலை ஒளித்து வைத்திருப்பதை ஷோபனா அம்பலப்படுத்துவதும் இயல்பான காட்சிகள். பணம் சம்பாதிப்பதற்காக ஷோபனாவுடன் பாட்டுப் போட்டியில் இறங்குவதும் ‘ஸ்வர வரிசை மட்டும் பாட வேண்டாம்’ என்று வேண்டிக் கொள்வதும் திடீரென மேடையில் ஷோபனா ஸ்வரத்தை எடுத்து விடும் போது ‘ரப்பரரப்பா’ என்று சமாளிப்பதும் பாக்யராஜின் நகைச்சுவை கலாட்டா. (இந்தப் பாடல் காட்சியில், இளமையான டிரம்ஸ் சிவமணியின் அலப்பறைகளைக் காண முடியும்).
‘மாடு ஏன் ஒரு மாதிரியான டோன்ல கத்துது?’ என்று வெள்ளந்தியாக பாக்யராஜ் கேட்பது அவரது டிரேட் மார்க் நகைச்சுவை. அரங்குகளில் ஆண்கள் வாய் விட்டுச் சிரிக்க, பெண்கள் நமட்டுச்சிரிப்புடன் அமர்ந்திருப்பார்கள். பாக்யராஜிற்கு ரசிகைகளின் ஆதரவு சேர்வதற்கு இம்மாதிரியான நகைச்சுவைகளும் ஒரு காரணம். மற்ற விஷயங்களில் புத்திசாலித்தனமாகப் பேசும் பாக்யராஜ், இது போன்ற நேரங்களில் மட்டும் அப்பாவித்தனமான முகத்தைக் காட்டுவார்.

‘நான் ஆளான தாமரை’ – தமிழகத்தைக் கதிகலங்க வைத்த ஷோபனா
‘எனக்குள் ஒருவன்’ திரைப்படத்தில் கமலுடன் ஹீரோயினாக தமிழில் அறிமுகமான ஷோபனா, பிறகு மலையாளப் படங்களில் பிசியாகி விட்டார். ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் தமிழிற்குத் திரும்பி வந்தது, இந்தப் படத்தின் மூலம்தான். பானு என்கிற பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருந்தார் ஷோபனா. இது அமைதியான பெண் பாத்திரமாகவும் இருக்க வேண்டும், அதே சமயத்தில் அவருக்குள் ஒரு அடாவடியான ‘ரவுடி’ பிம்பமும் இருக்க வேண்டும். இந்தக் கலவையில் ஷோபானாவின் நடிப்பு அசத்தலாக இருந்தது. பாக்யராஜைத் துரத்திக் காதலிக்கும் ஜாலியான காட்சிகள், பிறகு மனைவியின் அந்தஸ்தைக் கோரி நிற்கும் சென்டிமென்ட் காட்சிகள் என்று இரண்டிலுமே ஜொலித்தார். அதிலும் ‘நான் ஆளான தாமரை’ என்று இவர் ஆடிய கெட்ட ஆட்டத்திற்குத் தமிழகமே மயங்கியது.
ஸ்ரீனிவாச சாஸ்திரியாக ஜே.வி.சோமயாஜூலு. இந்தப் பாத்திரத்திற்கு இவரை விடவும் பொருத்தமான நபர் வேறு எவராவது இருப்பார்களா என்று தெரியவில்லை. பார்த்தவுடன் மரியாதை தன்னால் வரும் தோற்றம். படத்தின் முக்கியத்துவத்திற்கு ஆணிவேராக இருக்கும் பாத்திரம். ஸ்ரீனிவாச சாஸ்திரி மிகவும் நல்லவர். ஊருக்கு உதவி செய்பவர். நற்குணங்களை மதிப்பவர். பின்பற்றுபவர். ஆனால் சாதி என்று வரும் போது மட்டும் இறுக்கமாகி விடுவார். தன்னுடைய ஆச்சாரம்தான் முக்கியம் என்று பிடிவாதமாகி விடுவார். இவருடைய கேரக்ட்டர் ஸ்கெட்ச் ஒரு காட்சியின் மூலம் ஆரம்பத்திலேயே துல்லியமாகப் பதிவு செய்யப்படுகிறது.

ஏழை மக்களின் குடிசைகள் எரிந்து விட, அவர்கள் கும்பலாக வந்து சாஸ்திரியிடம் கண்ணீருடன் உதவி கேட்கிறார்கள். அதற்கான செலவைச் சாஸ்திரி ஏற்றுக் கொண்டு கிளம்புகிறார். அவருடைய மேல்துண்டு கீழே விழுந்து விடுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களிலிருந்து ஒரு சிறுவன் வந்து அந்தத் துண்டை எடுத்துத் தருகிறான். முகம் மாறும் சாஸ்திரி அதை வாங்க மறுத்து ‘அதை அவனே வைத்துக் கொள்ளட்டும்’ என்று கிளம்பிவிடுகிறார்.
திருமண வீட்டில் பாக்யராஜ் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது அம்பலமாகும் போது ‘நீ பிராமணணா… முதல்ல பூணூலைக் கழட்டு. என் பொண்ணைத் தொட மாட்டேன்னு சத்தியம் பண்ணு’ என்று சாஸ்திரி பொங்கியெழும் போது ‘என்னய்யா… இப்படி இருக்காரு’ என்று நமக்குத் திகைப்பாகி விடுகிறது. தன் கணவனைச் சந்தித்து விட்டுத் திரும்பும் மகளை வீட்டு வாசலில் நிற்க வைத்துத் தலைமுழுகும் காட்சியும் இப்படியானதுதான். படம் பூராவும் இறுக்கமாகவே இருக்கும் சாஸ்திரியை பாக்யராஜின் நற்பண்புகள் மெல்ல மெல்ல அசைத்துப் பார்க்கின்றன.
இறுதியில் தற்கொலைக்கு முயலும் சாஸ்திரியைக் காப்பாற்றி, பாக்யராஜ் பேசும் வசனங்களும் அதிலுள்ள தர்க்கமும் சிறப்பு. சாஸ்திரியின் மனதில் உள்ள சாதியம் மெல்லத் தகர்ந்து வருவதை, பின்னணியில் உள்ள வீடு எரிந்து விழும் காட்சியுடன் இணைத்திருப்பது நல்ல குறியீடு.

அடித்தட்டு சமூக பெற்றோர்களாக குமரிமுத்து, மனோரமா
ஏறத்தாழ இடைவேளைக் காட்சியில்தான் பாக்யராஜின் பெற்றோர்களாக குமரிமுத்துவும் மனோரமாவும் தலை காட்டுகிறார்கள். பிறகு இவர்கள் செய்யும் நகைச்சுவை கலாட்டாக்கள் காரணமாகப் படம் இன்னமும் வேகமெடுக்கிறது. ‘சாமி… சாமி’ என்று சாஸ்திரியிடம் இவர்கள் பம்மினாலும், தங்களுக்கான சுயமரியாதையை விட்டுத்தராமல் பேசும் காட்சிகள் சிறப்பு. மணமக்களிடையே ‘சாந்தி முகூர்த்தம்’ விரைவில் நடப்பதற்காக ஷோபனாவின் தாயார் சொல்லும் ஐடியாக்களும் அதைக் கேட்டு ‘அடேங்கப்பா’ என்று மனோரமா வாய் பிளக்கும் காட்சியும் சுவாரஸ்யமானவை. ஓர் அடித்தட்டு சமூகத்தின் பெற்றோர்களை குமரிமுத்துவும் மனோரமாவும் சிறப்பாகப் பிரதிபலித்திருக்கிறார்கள். அதிலும் மனோரமா தன் மருமகளுக்கு ஆசையுடன் புடவை எடுத்துத் தருவதும், சம்பந்தி வந்தவுடன் பாவனையாக வீறாப்பு காட்டுவதும் சிறப்பான காட்சி.
ஷோபானாவின் தாயாக ‘டப்பிங்’ ஜானகியின் நடிப்பும் பொருத்தமாக இருந்தது. ரெபிடெக்ஸ் ஆங்கிலத்தைத் தப்பும் தவறுமாகப் பேசி விட்டு ஸ்டைலாகப் பார்ப்பதும், பாக்யராஜ்தான் தன் வீட்டு மாப்பிள்ளையாக வர வேண்டும் என்று ஆசைப்படுவதும் என இயல்பான கேரக்ட்டர். இந்தப் படத்தின் இன்னொரு சுவாரஸ்யமான பாத்திரம் ‘கிருஷ்ணய்யர்’. தயாரிப்பாளரும் இயக்குநருமாகிய கலைஞானம், இந்தப் படத்தில்தான் நடிகராக அறிமுகமானார். ‘பிராடு ஐயராக’ சிறுவர்களுக்கு விதம் விதமான வேஷங்களை மாட்டிச் சுண்டல் விற்க அனுப்பும் ஆரம்பக்காட்சியே கனஜோர்.

தவறு செய்யாமல் பாக்யராஜ் பின்வாங்கும் போதெல்லாம், அவரை ஊக்கப்படுத்தி முன்னால் அனுப்பும் வேலையைக் கச்சிதமாகச் செய்தார். முகத்தைக் கோணலாக வைத்துக் கொண்டு இவர் சொல்லும் நக்கல் வசனங்கள் ஒவ்வொன்றும் பட்டாசு. ஹோட்டல் முதலாளியாக ஆரம்பக் காட்சியில் வந்து போகிறார், எழுத்தாளரும் இயக்குநருமான பாலகுமாரன்.
பாக்யராஜின் அறிமுக இசையில் பாடல்கள் இனிமையாக இருந்தன. ‘அம்மாடி… இதுதான் காதலா…’, ‘காமதேவன் ஆலயம்’, ‘சங்கீதம் பாட’ போன்ற பாடல்களில் எஸ்.பி.பியுடன் இணைந்து ஜானகியும் சித்ராவும் சுவாரசியப்படுத்தியிருந்தார்கள். பின்னணியில் ஆறு ஓட, நந்தவனம் போல் செடியும் கொடியும் நிறைந்திருக்கும் வீட்டின் அழகை, ராஜ்ப்ரீத்தின் கேமரா சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருந்தது.
பாக்யராஜின் திரைக்கதையும் ‘சாதிய’ டிரீட்மெண்ட்டும்
“பொண்ணோட அப்பா பிடிவாதமா இருக்காரு. நாம இந்த ஊரை விட்டுப் போயிடலாம்” என்று பாக்யராஜின் பெற்றோர்கள் கூற, “நான் எந்த சமூகத்தைச் சேர்ந்தவன்றது மட்டும்தான் அவருக்குப் பிரச்னை. எல்லோரும் சமம்தான்னு அவருக்குப் புரிய வைக்கணும்” என்று சுயமரியாதை உணர்வுடன் பாக்யராஜ் பேசும் வசனமும் சொல்லும் காரணமும்தான் படத்தின் முக்கிய திருப்பம். படத்தை அர்த்தமுள்ளதாக்குவதும் இந்தத் திருப்பமே.

ஸ்ரீனிவாச சாஸ்திரி வேத பண்டிதர். நல்ல மனிதர். ஊரே அவரை வணங்குகிறது. ‘சாமி.. சாமி..’ என்று அடித்தட்டு மக்கள் பம்முகிறார்கள். பாக்யராஜிற்கும் அவர் மீது நிறைய மரியாதை இருக்கிறது. என்றாலும் அதற்காக ஒதுங்கிச் செல்லாமல், அவரிடம் நிறைந்திருக்கும் சாதிய நோயை தன் நற்பண்புகளால் குணப்படுத்துவது சிறப்பானது. கோயில் நகை திருட்டுப் போகும் போது, ஒரு பிராமணப் பெண்ணின் திருமணம் நின்று விடக்கூடாது என்பதற்காக அந்தப் பழியை பாக்யராஜ் ஏற்றுக் கொள்வதும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண், பிராமணக் குழந்தையின் பசிக்குப் பால் கொடுத்த விஷயம் பஞ்சாயத்திற்கு வந்து சேர, ஆதரவற்ற பெண்ணுக்கு நியாயம் தேடித் தருவதும் சிறப்பான காட்சிகள்.
‘எல்லோருமே நம்ம ஆளுதான்’ என்கிற செய்தியை நகைச்சுவை மருந்துடன் தந்திருக்கும் இந்தப் படத்தை இன்றும் பார்த்து ரசிக்கலாம். ‘அட! பாக்யராஜ் நம்ம ஆளுப்பா’ என்கிற அளவிற்கு ஜனரஞ்சகமாக இருக்கிறது, அவர் திரைக்கதையை எழுதிய விதம்.