சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த வீட்டை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த வீட்டுக்கு இளைஞர்கள், ஆண்கள் அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. அதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி விசாரித்தபோது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. உடனடியாக போலீஸ் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோருக்கு இன்ஸ்பெக்டர் செல்வராணி தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டுக்குள் இளம்பெண்கள், ஆண்கள் இருந்தனர். பெண்களை போலீஸார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரித்தபோது மீட்கப்பட்ட இளம்பெண்கள், துணை நடிகைள் எனத் தெரியவந்தது. அவர்களை பாலியல் புரோக்கர்கள், சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறி இந்தத் தொழிலில் தள்ளியிருப்பது தெரியவந்தது.
விசாரணையில் சிக்கியவர்கள், நெல்லை கரிசல்பட்டியைச் சேர்ந்த சிமியோன், திருப்போரூரைச் சேர்ந்த காளிதாஸ் எனத் தெரியவந்தது. அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரிடம் விசாரித்தபோது பாலியல் தொழிலை நடத்தி வந்தவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. அவர் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து துணை நடிகைகளை சென்னைக்கு வரவழைத்து பாலியல் தொழிலில் தள்ளியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக ஐ.டி ஊழியர்களை டார்க்கெட் செய்து இந்த பாலியல் தொழில் நடந்து வந்திருக்கிறது. ஆன்லைன் மூலம்தான் ஐடி ஊழியர்களுக்கு வலைவிரிக்க துணை நடிகைகளின் போட்டோஸ்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்திருப்பதும் விசாரணயில் தெரியவந்திருக்கிறது. 4 மணி நேரத்துக்கு 25,000 ரூபாய் என பேரமும் நடந்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் நபரை போலீஸார் தேடிவருகிறார்கள்.