புதுடில்லி, ஜம்மு – காஷ்மீரில், எல்லைப் பகுதியில் நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை ஏழு மணி நேரம் நடத்திய தாக்குதலில், இருவர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து, பி.எஸ்.எப்., எனப்படும், இந்திய எல்லை பாதுகாப்புப் படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
ஜம்மு – காஷ்மீரின் அர்னியா என்ற பகுதியில், பொதுமக்கள் குடியிருப்பு பகுதி மற்றும் நம் பாதுகாப்புப் படையினரின் முகாம்களை குறிவைத்து, பாக்., எல்லை பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
கடந்த 26ம் தேதி இரவு 8:00 மணி முதல், தொடர்ந்து ஏழு மணி நேரம் தாக்குதல் நடத்தினர்.
இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை பயன்படுத்தி, பாக்., படை நடத்திய தாக்குதலில், பி.எஸ்.எப்., வீரர் பஸ்வா ராஜ் காயமடைந்தார். இதே போல், அர்னியாவைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
பாக்., படையின் தாக்குதலுக்கு, நம் பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
தாக்குதல் நடந்த பகுதியில், பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement