“இந்தியா கூட்டணியின் நிலை தற்போது வலுவாக இல்லை..!" – உமர் அப்துல்லா சொல்வதென்ன?

வருகின்ற நவம்பரில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முன் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் என்பதால் இதில் பெற்றிபெற்று லோக் சபா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதேசமயம், லோக் சபா தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள், இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் தனித்தனியே போட்டியிடுகின்றன.

இந்தியா கூட்டணி

இதனாலேயே, லோக் சபா தேர்தலுக்கு முன்பாகவே இந்தியா கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிகள் கழன்றுவிடும் என பா.ஜ.க விமர்சித்து வருகிறது. அதற்கான காரணம், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுக்கும், சமாஜ்வாதிக்கும் இடையே மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஒருவாரமாக ஏற்பட்டிருக்கும் மோதல்போக்குதான்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் சமாஜ்வாதிக்கு சீட் ஒதுக்காமல் தனித்து களமிறங்குவதால், “சமாஜ்வாதி தங்களுக்குத் தேவையில்லை என்றால் காங்கிரஸ் அதை நேரடியாகக் கூறவேண்டும். அதன்பிறகு கூட்டணி குறித்து ஒருமுறை கூட பேச மாட்டோம். பா.ஜ.க-வை தோற்கடிக்க நாங்களே ஆயத்தமாவோம்” என அகிலேஷ் வெளிப்படையாகப் பேசினார். இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, இந்தியா கூட்டணியின் நிலை தற்போது வலுவாக இல்லாதது துரதிஷ்டவசமானது எனத் தெரிவித்திருக்கிறார்.

உமர் அப்துல்லா

இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “இந்தியா கூட்டணியின் நிலை தற்போது வலுவாக இல்லை என்பது துரதிஷ்டவசமானது. அடுத்த மாதம் தேர்தல் இருப்பதால், உட்பூசல்கள் இருக்கக்கூடாது. காங்கிரஸுக்கும், சமாஜ்வாதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருப்பதும், இரு கட்சிகளும் உத்தரப்பிரதேசத்தின் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடுவோம் என்று கூறுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்லதல்ல. மாநில தேர்தல்களுக்குப் பிறகு சந்திப்பு நடத்தி, ஒன்றாக இணைந்து வேலை செய்ய முயற்சிப்போம்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.