அமைச்சின் செயலாளர் ஒருவர் உட்பட 6 புதிய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

 

அமைச்சின் செயலாளர் ஒருவர் உட்பட 6 புதிய நியமனங்களுக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரம் கிடைத்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதற்கு அமைய பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கே.டி.என்.ஆர். அசோக்கவின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக திருமதி கே.டி.செனவிரத்னவை நியமிப்பதற்கும், ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எஸ்.ஆர்.பி. போகல்லாகமவை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக டீ.டீ.எம்.எஸ்.பி. திசாநாயக்க, பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவராக டபிள்யூ.கே.சி.வீரசுமன மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா உர நிறுவனத்தின் தலைவராக கலாநிதி பி.கே.ஜீ.கே.பெரேரா ஆகியோரின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (15) பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான கௌரவ நிமல் சிறிபால டி சில்வா, கெளரவ விதுர விக்கிரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ ரிஷாத் பதியுதீன் மற்றும் கௌரவ உதய கம்மன்பில ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.