கும்பகோணம் அருகே தன்பாலின உறவுக்கு மறுத்த இளைஞரை சித்த வைத்தியர் ஒருவர் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் பின் பகுதியில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்த வைத்தியரை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

கும்பகோணம் அருகே உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் அசோக்ராஜன் (27), இளைஞரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்தவர், கடந்த 13-ம் தேதி சிதம்பரம் சென்று நண்பரை பார்த்து விட்டு மீண்டும் சென்னைக்கு செல்வதாக தனது பாட்டி பத்மினியிடம் சொல்லி விட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார்.
அதன் பிறகு அசோக்ராஜனிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை. பத்மினி அவருக்கு போன் செய்து பார்க்க, செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதையடுத்து கடந்த 15-ம் தேதி சோழபுரம் காவல் நிலையத்தில் பத்மினி புகார் செய்துள்ளார். இதனைதொடர்ந்து சோழபுரம் போலீஸார் சோழபுரம் கடைத்தெருவில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில் கீழத்தெரு வழியாக சென்ற அசோக்ராஜன் மீண்டும் திரும்பவில்லை.

இந்நிலையில் சோழபுரம் கீழத்தெருவை சேர்ந்த சித்த வைத்தியரான கேசவமூர்த்தியிடம் (47) அகோக்ராஜன் பழகியுள்ளதால், அங்கு வந்தாரா என உறவினர்கள் அவரிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர், `தனக்கு பாலியல் ரீதியாக குறைபாடு உள்ளது. அதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை என என்னிடம் அழுது கொண்டு கூறினான். நான் தஞ்சாவூரில் உள்ள டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை எடுக்க வலியுறுத்தினேன்’ என்றுள்ளார்.
மறுநாள் அசோக்ராஜன் வீட்டிற்கு, ஒரு கடிதம் ஒன்று வந்தது. அதில், `எனக்கு சில குறைபாடுகள் இருப்பதால் வாழ பிடிக்கவில்லை’ என அசோக்ராஜன் எழுதி அனுப்பியது போல் அந்த கடிதம் ஒன்று வந்துள்ளது. இது அசோக்ராஜன் கையெழுத்து இல்லை என பத்மினி உள்ளிட்டவர்கள் போலீஸில் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து கேசவமூர்த்தி மேல் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட, அவரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். ஆரம்பத்தில் சொன்னதையே திரும்ப சொன்ன கேசவமூத்தியிடன் போலீஸ் தங்கள் பாணியில் விசாரிக்க அசோக்ராஜனை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்து விட்டதாக சொல்லியிருக்கிறார்.

“அசோக்ராஜனுடன் நான் தன்பாலின உறவு வைத்து கொண்டேன். கடந்த 13-ம் தேதி என் வீட்டுக்கு வந்த போது மது போதையில் இருந்தார். அப்போது தன்பாலின உறவுக்கு அழைத்தேன். ஆனால் அவர் மறுத்தார். அப்போது அவருக்கு நீண்ட நேர பாலியல் உறவு கொள்ள வீரியமிக்க மருந்து ஒன்றை கொடுத்தேன். மது போதையில் இருந்த அவரது உடல் அந்த மருந்தை ஏற்று கொள்ளததால் இறந்து விட்டார்.
இதையடுத்து உடலை துண்டு துண்டாக வெட்டி என் வீட்டுக்கு பின்புறம் உள்ள கழிப்பறைக்குள் குழி தோண்டி புதைத்து விட்டேன்” என பதற்றமே இல்லாமல் சொன்னதை கேட்டு போலீஸார் அதிர்ந்துள்ளனர். இதையடுத்து ஆர்.டி.ஓ., பூர்ணிமா, திருவிடைமருதுார் டி.எஸ்.பி., ஜாபர்சித்திக் உள்ளிட்டோர் தலைமையில் அசோக்ராஜனின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்துள்ளனர். பின்னர் கேசவமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேசவமூர்த்திக்கு இரண்டு மனைவிகள். ஆனால் இருண்டு பேருமே அவருடன் வாழாமல் பிரிந்து சென்று விட்டனர் என்று சொல்லப்படுகிறத. கேசவமூர்த்தி இளைஞர்களுடன் நெருக்கமாக பழகி அவர்களுடன் உறவு வைத்து கொள்வது வழக்கம். அப்படி தான் அசோக்ராஜனிடமும் பழகியுள்ளார். இது போல் பலரிடம் கேசமூர்த்திக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. கேசவமூத்தியிடம் பழகி வந்த இளைஞர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரது நிலை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. அது குறித்தும் போலீஸார் கேசவமூர்த்தியிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.