நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது..!

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் மாதம் 2-வது வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 4-ந் தேதி (அதாவது இன்று) தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற 22-ந்தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 15 நாட்கள் அலுவல் நாட்களாக இருக்கும். இந்த 15 நாட்களில் மொத்தம் 21 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், நேற்று வெளியானது. இதில் தெலுங்கானாவை தவிர மற்ற 3 மாநிலங்களிலும் பா.ஜனதா வெற்றி வாகை சூடியுள்ளது. இது இந்த கூட்டத்தொடரில் எதிரொலிக்கும். இதன் காரணமாக பா.ஜனதா, காங்கிரஸ் இடையே நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் வகையில் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.