ராம் படப்பிடிப்பு தள்ளிப்போவது ஏன்? – மனம் திறந்த ஜீத்து ஜோசப்

திரிஷ்யம் படங்களில் அடுத்தடுத்த பாகங்களின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப் – மோகன்லால் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து வெளியான டுவல்த் மேன் திரைப்படம் ஒடிடியில் வெளியானாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்ததாக வரும் டிசம்பர் 21ம் தேதி இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள 'நேர்' திரைப்படம் வெளியாக இருக்கிறது.

அதேசமயம் டுவல்த் மேன் படத்திற்கு முன்பே மோகன்லால், திரிஷா நடிப்பில் ராம் என்கிற படத்தை துவங்கினார் ஜீத்து ஜோசப். படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே கொரோனா தாக்கம் ஏற்பட அத்துடன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதே சமயம் கொரோனா தாக்கம் விலகிய பிறகும் இப்போது வரை ராம் படம் துவங்கப்படவில்லை. ஆனால் அதன்பிறகு மோகன்லால் நடிப்பில் இரண்டு படங்கள் உட்பட கிட்டத்தட்ட ஐந்து படங்களை இயக்கி முடித்து விட்டார் ஜீத்து ஜோசப் இப்போது புதிய படம் ஒன்றையும் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நேர் பட புரமோசனில் கலந்து கொண்ட ஜீத்து ஜோசப், ராம் படத்தை எதனால் மீண்டும் துவங்கவில்லை என்பது குறித்து மனம் திறந்து உள்ளார். “நான் எந்த ஒரு படத்தின் டிரைலரையோ போஸ்டர்களையோ என்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிடும்போதோ அல்லது ஏதோ ஒரு பேட்டி கொடுக்கும்போதோ அதன் கீழே ரசிகர்கள் அனைவருமே கேட்பது ராம் படம் எப்போது துவங்கும் என்பது பற்றி தான். இப்போது அது பற்றி கூறுகிறேன்.

ராம் படத்திற்கான சில பிரச்சனைகள் தயாரிப்பாளர் தரப்பில் தான் இருக்கின்றன. அவற்றை அவர்கள் நிவர்த்தி செய்தால் மட்டுமே ராம் படத்தை மீண்டும் துவங்க முடியும். என் தரப்பில் இருந்து இயன்றவரை இந்த பிரச்சனைகள் தீர நான் முயற்சி செய்து வருகிறேன். மற்றபடி தயாரிப்பாளர்களின் கைகளில் தான் இதற்கான தீர்வு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.