நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், நாட்டில் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் ஒன்றாக இருக்கின்றன. யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தோட்டங்களை நோக்கி வருவதால், மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் வனத்துறை பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பந்தலூர் அருகிலுள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் பெண்கள் மூவர், இயற்கை உபாதை கழிப்பதற்காக தேயிலைத் தோட்டத்தின் வழியாக இன்று காலை நடந்து சென்றுள்ளனர்.
தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று, திடீரென சீறிப்பாய்ந்து மூன்று பேரையும் தாக்கத் தொடங்கியிருக்கிறது. அலறித்துடித்த பெண்கள் மூவரும், தப்பித்து ஓடத்தொடங்கியுள்ளனர். ஆக்ரோஷமாக பாய்ந்த சிறுத்தை மூன்று பேரையும் தாக்கியிருக்கிறது.
பெண்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், பெண்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு சிறுத்தையை விரட்டியுள்ளனர். காயமடைந்த பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்காத வனத்துறையைக் கண்டித்து சாலைமறியலிலும், கடையடைப்பிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள், “இந்தப் பகுதியில் சிறுத்தை மற்றும் புலி நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினரிடம் தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்தோம். ஆனால், அவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. இன்றைக்கு இப்படி ஒரு விபரீதம் ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், “இந்தப் பகுதியில் சிறுத்தை மற்றும் புலி நடமாட்டம் இருக்கிறது. பெண்களை தாக்கிய சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறிய 30 தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவிருக்கிறோம். 20 பேர் கொண்ட தனிக்குழுவை நியமித்திருக்கிறோம். காயமடைந்த பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிவாரணத் தொகையும் வழங்க இருக்கிறோம். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காத்து வருகிறோம். மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றனர்.