Vijayakanth: `அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை!' – கலங்கிய திரைப்பிரபலங்கள்!

தேமுதிக தலைவரும், நடிகருமான  விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

71 வயதான விஜயகாந்திற்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விட திணறியதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்திருக்கிறார். திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்தவர் விஜயகாந்த்.

விஜயகாந்த்

அவரின் மறைவிற்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.  அந்தவகையில் விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் விக்ரமும்  தனது ‘X’ வலைதளத்தில் இரங்கலைத் தெரிவித்து இருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்தப் பதிவில் “மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவரான விஜயகாந்தின் இரங்கல் செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். நாங்கள் உங்களை மிஸ் செய்வோம் கேப்டன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து நடிகை த்ரிஷாவும் இரங்கல் தெரிவித்திருக்கிறார். ” RIP கேப்டன். பிரேமலதா மேடம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். உங்கள் அன்பை நான் என்றென்றும் நினைவில் கொள்கிறேன் சார்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டிருந்த இரங்கல் பதிவில், ” எனது நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது. அவரின்மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிபிட்டிருக்கிறார்.

இயக்குநர் முருகதாஸ் வெளியிட்டிருந்த இரங்கல் பதிவில்,” அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி” என்று குறிபிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.