செய்தியாளர்கள் சந்திப்பின்போது எதிர்க்கட்சி தலைவர் மீது கத்திக்குத்து தாக்குதல் – தென்கொரியாவில் பரபரப்பு

சியோல்,

தென்கொரியா நாட்டின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைவர் லி ஜி மியங். இவர் இன்று காலை அந்நாட்டின் புசன் மாகாணம் ஹடியொக் தீவில் புதிதாக கட்டப்பட்டுவரும் விமான நிலையத்தை பார்வையிட்டார்.

அதன்பின்னர், லி ஜி மியங் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு லி பதிலளித்துக்கொண்டிருந்தார். அப்போது, லி ஜி மியங்கின் ஆதரவாளர்போல் வந்த நபர் ஆட்டோகிராப் (கையெழுத்து) வாங்குவதுபோல் அவரை நெருங்கியுள்ளார்.

திடீரென அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் எதிர்க்கட்சி தலைவர் லி ஜி மியங்கின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த லி ஜி மியங் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்த போலீசார் லி ஜி மியங்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லி ஜி மியங் கழுத்தின் இடது பக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, லி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர்கள் சந்திப்பின்போது எதிர்க்கட்சி தலைவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தென்கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.