IND vs AFG T20 Updates: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் (IND vs AFG T20 Series) நேற்று தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. அதிகளவிலான பனிமூட்டம் மற்றும் செயற்கை வெளிச்சத்திற்கு மத்தியில் நேற்றைய போட்டி நடைபெற்றது எனலாம். அதிக பனிப்பொழிவு காரணமாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கட்டுக்கோப்பான பந்துவீச்சு
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிதான தொடக்கத்தையே அளித்தது. ஓப்பனிங் இறங்கிய இப்ராஹிம் சத்ரான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருப்பினும், குர்பாஸ் 23, இப்ராஹிம் சத்ரான் 25 என அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய ரஹ்மன் ஷா 3 ரன்களில் வெளியேற அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் உடன் அனுபவ வீரர் நபி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இருப்பினும் கடைசி கட்ட ஓவர்களில் இருவரும் ஆட்டமிழந்தாலும், மறுபக்கம் நஜிபுல்லா சத்ரான் பவுண்டரிகளை குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை ஆப்கானிஸ்தான் எடுத்தது. நபி 42 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். அக்சர் படேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஷிவம் தூபே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ரோஹித் சர்மா டக்அவுட்
அடுத்து இறங்கிய இந்திய அணிக்கு 2ஆவது பந்திலேயே ஆப்பு காத்திருந்தது, அதுவும் குறிப்பாக ரோஹித் சர்மாவுக்கு. ரோஹித் சர்மா மிட் ஆப் திசையில் அடித்து ஓட, சுப்மான் கில் பந்தை பார்த்துவிட்டு ஓடாமல் நின்றுவிட்டார். ஆனால், ரோஹித் சர்மா பாதி பிட்சை தாண்டி ஓடிவந்த பின்தான் கில் அவர் வருவதையே பார்த்தார். கீப்பர் முனையில் ரன் அவுட் செய்யப்பட தனது விக்கெட்டை தானம் செய்து கடும் அதிருப்தியுடன் பெவிலியன் திரும்பினார், ரோஹித் சர்மா (Rohit Sharma Runout). zeenews.india.com/tamil/sports/shocking-rohit-sharma-and-virat-kohli-not-playing-in-icc-t20-worldcup-2024-482529
முடித்து வைத்த ‘சிக்ஸர்’ தூபே
கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் ரோஹித் விளையாடிய முதல் சர்வதேச டி20 போட்டியில் இப்படி துரதிருஷ்டவசமாக டக்அவுட்டானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. 12 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களை எடுத்து சுப்மான் கில்லும் முஜீப் உர் ரஹ்மான் விரித்த வலையில் சிக்கி வெளியேறினார். அடுத்து வந்த திலக் வர்மா – ஷிவம் தூபே ஜோடி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை மிக துணிச்சலாக எதிர்கொண்டது. பவர்பிளே முடிந்த உடன் ஆட்டம் முற்றிலும் பேட்டர்களுக்கு சாதகமாக மாறியது போன்று தெரிந்தது.
திலக் வர்மா 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என 23 ரன்களில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். தூபேவின் அதிரடிக்கு ஜித்தேஷ் சர்மாவும் அடுத்து வந்து கைக்கொடுத்தார். 20 பந்துகளில் 5 பவுண்டரிகள் என 31 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிங்கு சிங்கும் இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டார். அரைசதம் கடந்த தூபே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். 17.3 ஓவர்களிலேயே இந்தியா இலக்கை எட்டியது. தூபே 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 60 ரன்களை எடுத்தார். ஷிவம் தூபே (Shivam Dube) விக்கெட்டும் வீழ்த்தியதால் அவரே ஆட்டநாயகனாக தேர்வானார். and Shivam Dube wraps the chase in style #TeamIndia win by 6 wickets and take a 1-0 lead in the T20I series
Scorecard https://t.co/BkCq71Zm6G#INDvAFG | @IDFCFIRSTBank | @IamShivamDube pic.twitter.com/4giZma4f1u
— BCCI (@BCCI) January 11, 2024
தோனியின் மதிப்பீடு
போட்டி முடிந்த பின் பேசிய ஷிவம் தூபே”நல்ல வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்த மிகவும் தயாராக இருந்தேன். நான் பேட்டிங் செய்ய வந்தபோது, போட்டியை முடிக்க விரும்பினேன். நான் அதை மஹி பாயிடம் (மகேந்திர சிங் தோனி) கற்றுக்கொண்டேன், போட்டியை நன்றாக முடிக்க விரும்பினேன்.
நான் எப்போதும் அவரிடம் (MS Dhoni) பேசிக்கொண்டே இருப்பேன். அவ்வளவு பெரிய ஜாம்பவான் அவர். நான் எப்போதும் அவரைப் பார்ப்பது மூலமும், கவனிப்பதன் மூலமும் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டுள்ளேன். எனது ஆட்டத்தைப் பற்றி ஓரிரு விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார். நான் நன்றாக விளையாடுகிறேன் என்று அவர் எப்போதும் என்னை மதிப்பிடுவார். அவர் என்னை அப்படி மதிப்பிடுவது, எனக்கு நன்றாக விளையாடுவதற்கான ஊக்கத்தை அளிக்கிறது. அதனால், என் நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது” என குறிப்பிட்டார்.
இந்திய அணியில் இடம் உறுதி
ஷிவம் தூபே ஐபிஎல் போட்டிகள் மூலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு முன்னரே அறிமுகமானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த பின்னரே அவரின் முழு திறனையும் பலரும் உணர்ந்தனர் எனலாம். கடந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டியில் வெல்ல ‘சிக்ஸர்’ தூபேவின் அதிரடியும் ஒரு காரணமாகும். சென்னை அணிக்கான ஆட்டத்திற்கு பின்னரே இந்திய டி20 அணியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், உள்ளூர் போட்டிகளிலும் ஷிவம் தூபே பல சிறப்பான ஆட்டங்களையும் தற்போது விளையாடி உள்ளார்.
இடது கை பேட்டர் மட்டுமின்றி மிதவேக வலது கை வேகப்பந்துவீச்சாளர் என்ற அம்சம்தான் ஷிவம் தூபேவுக்கான இடத்தை இந்திய அணியில் உறுதி செய்கிறது எனலாம். ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், மூத்த வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் வெற்றிடத்தை (Hardik Pandya Replacement) தூபேவால் நிச்சயம் பூர்த்தி செய்ய இயலும் என பல வல்லுநர்கள் நம்புகின்றனர். அதற்கு முக்கிய காரணம் அவர் தோனியின் பட்டறையில் கூர்தீட்டப்பட்டு வரும் ஓர் ஆயுதம் என்பது குறிப்பிடத்தக்கது.