மத்திய பிரதேசம்: டிராக்டர் விபத்தில் சிக்கி 3 சிறுவர்கள் பலி; முதல்-மந்திரி இரங்கல்

போபால்,

மத்திய பிரதேசத்தில் சத்தார்ப்பூர் நகரில் பிஜாவர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஜ்னா சாலையில் டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த டிராக்டரில், ஜஜ்ஜார்ப்பூர் கிராம பகுதியை சேர்ந்த 40 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது சாலையில் டிராக்டர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதுபற்றி பிஜாவர் காவல் அதிகாரி ஷஷாங் ஜெயின் கூறும்போது, டிராக்டரின் குறுக்கே இரண்டு சக்கர வாகனம் ஒன்று வந்தது போன்று தெரிகிறது. இதனால், மோட்டார் வாகனத்தில் இருந்தவர்களை பாதுகாப்பதற்காக டிராக்டரின் ஓட்டுநர் முயன்றிருக்கிறார்.

அப்போது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் நம்ரதா லோதி (வயது 15), ரவி லோதி (வயது 8) மற்றும் திவ்யான்ஷி லோதி (வயது 5) என அடையாளம் காணப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.