ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்.. தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் மிரட்டல்

சியோல்:

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டின் ஆயுத பலத்தை அதிகரித்து அச்சுறுத்துவதாலும், பதில் நடவடிக்கையாக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த ராணுவ பயிற்சிகளை தீவிரப்படுத்துவதாலும் கடந்த சில மாதங்களாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தென் கொரியாவுடனான அனைத்து பொருளாதார ஒத்துழைப்பையும் முறித்துக்கொள்வதாக வட கொரியா அறிவித்துள்ளது. சமீபத்தில் ராணுவ வீரர்களிடையே கிம் ஜாங் உன் பேசும்போது, போருக்கு தயார் நிலையில் இருக்கும்படி தெரிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் நேற்று பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், தென் கொரியாவுடன் தூதரக உறவை தொடரவோ பேச்சுவார்த்தை நடத்தவோ விருப்பம் இல்லை என்றும், தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் தென் கொரியாவை வட கொரியா அழித்து நிர்மூலமாக்கிவிடும் என்றும் மிரட்டல் விடுத்தார்.

தென் கொரியாவுடனான உறவுகளைத் துண்டிப்பது தொடர்பான சமீபத்திய நகர்வுகள், ராணுவம் தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த அனுமதிப்பதாகவும், எப்போது தூண்டப்பட்டாலும் தென் கொரியாவை தாக்கி அழிக்க சட்டப்பூர்வ அனுமதியை பெறுவதாகவும் கிம் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.