ஒடிசா: மகளின் தோழியை பாலியல் வன்கொடுமை செய்த 54 வயது நபர் கைது

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது தோழியின் தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், கடந்த வருடம் தனது தோழியை சந்திப்பதற்காக அவளது வீட்டிற்கு சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த தோழியின் தந்தை சூழ்நிலையைப் பயன்படுத்தி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த சம்பவத்திற்கு அவர் மன்னிப்பு கேட்டதால், இது பற்றி யாரிடமும் கூறவில்லை என்றும், ஆனால் சில மாதங்களுக்கு முன்பு கட்டாக்கில் உள்ள தனது உறவினர் வீட்டில் தோழியின் தந்தையை சந்தித்தபோது மீண்டும் அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

மேலும் இந்தச் செயலை அவர் தனது மொபைலில் படம்பிடித்ததாகவும், அவரது விருப்பத்திற்கு இணங்காவிட்டால் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என அவர் மிரட்டியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இந்த சூழலில், அந்த பெண்ணை வன்கொடுமை செய்த நபர் தன்னுடனான உறவை தொடர வேண்டும் என்று அவரை மிரட்டியுள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரது ஆபாசப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அந்த நபர் வெளியிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 54 வயது நபர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.