மக்களவைத் தேர்தலில் 370 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. கைப்பற்றும் – பிரதமர் மோடி நம்பிக்கை

ஜபுவா,

மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தினரின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, 543 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 370 இடங்களைக் கைப்பற்ற, கடந்த தேர்தலை விட, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 வாக்குகள் கூடுதலாகப் பெறுவதை உறுதி செய்யுமாறு அவர் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட இப்போது (பா.ஜனதா தலைமையிலான) தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்.டி.ஏ.) 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். பா.ஜனதாவின் தாமரை சின்னம் 370-ஐ தாண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மக்களவை தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்காக ஜபுவாவிற்கு நான் வரவில்லை. ஆனால் “சேவக்” என்ற முறையில், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கவே வந்துள்ளேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில் பேசுவதற்கு முன் அவர் தொடங்கிவைத்த ரூ.7,550 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைக் குறிப்பிட்டு, “எங்கள் ‘இரட்டை எஞ்சின்’ அரசாங்கம் மத்தியப் பிரதேசத்தில் இரட்டிப்பு வேகத்தில் செயல்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் ஏழைகள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினரை நீண்ட காலமாகப் புறக்கணிப்பதாகவும், தேர்தல் நேரத்தில்தான் கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் அவர்களுக்கு நினைவுக்கு வருவார்கள் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.