`45 நாளில் ரூ.2.5 லட்சம்..!’ – பெற்ற 5 குழந்தைகளுடன் யாசகம் எடுத்து வந்த பெண் கைது

நாடு முழுவதும் யாசகம் கேட்பவர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அவர்களில் பலர் தங்களது உறவுகளால் கைவிடப்பட்ட அல்லது உறவுகள் இல்லாதவர்களாக இருக்கின்றனர். பலர் யாசகம் எடுத்து பெற்ற பணத்தை கூட பயன்படுத்தாமல் உயிரிழந்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. ஆனால் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தன் குழந்தைகளை யாசகத்தில் ஈடுபடுத்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தூரில் யாசகம் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இந்தூர் முனிசிபல்  கார்ப்பரேஷன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று  இணைந்து, அப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வருபவர்களுக்கு மறுவாழ்வு அளித்து உதவும்  முயற்சியில் ஈடுபட, அப்பகுதியில் யாசகம் பெறுபவர்களின் தரவுகளை சேகரித்து உள்ளது. அப்பொழுது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் வெவ்வேறு பகுதியில் யாசகம் பெற்று வருவதை கண்டறிந்தனர். மேலும் இந்தூரில் மட்டும் 7 ஆயிரம் பேர் யாசகம் கேட்பவர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்களில் 50 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவர். தொண்டு நிறுவன பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பில் தனது மகளுடன் சேர்ந்து யாசகம் எடுத்து வந்த இந்திரா என்ற பெண்ணை அணுகி மறுவாழ்வு குறித்து பேசினர். ஆனால் அவர் தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். சாப்பாடு இல்லாமல் சாவதை விட யாசகம் கேட்பது மேல் என்று இந்த வேலையை செய்வதாகவும், திருடுவதை விட இது மேல் என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் வசித்து வரும் இந்திராவுக்கு திருமணமாகி 10, 8, 7, 3, 2 வயதில் என ஐந்து குழந்தைகள் உள்ளன. இவர் தனது கணவருடன் சேர்ந்து, தனது  ஐந்து குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்காமல் அவர்களை வற்புறுத்தி பல காலகமாக யாசகம் பெறும் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறார் என்பது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் இந்தூர் நகரின் முக்கிய சிக்னல்கள் மற்றும் சாலை சந்திப்புகளில் நின்று யாசகம் கேட்கின்றனர். இந்திராவை பிடித்த போது அவருடன் அவரது 7 வயது மகளும் இருந்தார். அவருடன் இருந்த அவரது கணவர் மற்றும் அவரது வேறு இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிட்டனர். இந்திராவின் பையை சோதித்து பார்த்த போது அதில் 19,600 ரூபாய் இருந்தது. அவரது 7 வயது மகளிடம் ரூ.600 இருந்தது.

அவரை தொண்டு நிறுவன பிரதிநிதிகள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரித்த போது, இந்தூரில் இருந்து உஜ்ஜைன் செல்லும் சாலையின் சந்திப்பில் தனது குழந்தைகளை யாசகம் கேட்க நியமித்து இருப்பதாக தெரிவித்தார். உஜ்ஜைன் மகாகால் கோயிலுக்கு செல்பவர்கள் யாசகம் கேட்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பார்க்கும் போது யாசகம் கொடுப்பார்கள். அதேபோன்று கோயிலுக்கு சென்று விட்டு திரும்ப வரும்போதும் சிறிதாவது யாசகம் கொடுப்பார்கள். இதற்கு முன்பு மகாகால் கோயிலுக்கு தினமும் 2500 பேர் தான் வந்து சென்றார்கள்.

கைது

ஆனால் இப்போது மகாகால் லோக் கட்டிய பிறகு இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டிவிட்டது. இதனால் பக்தர்கள் சிறிது யாசகம் செய்தாலும் யாசகர்களின் வருமானம் கணிசமாக அதிகரித்து விடுகிறது. தன்னை கைது செய்வதற்கு முன் 45 நாட்களில் 2.5 லட்சம் ரூபாய் யாசகம் மூலம் பெற்றதாக இந்திரா குறிப்பிட்டுள்ளார். யாசகம் பெற்ற பணத்தை தாரளமாக செலவும் செய்திருக்கிறார்.

குழந்தைகளை கொண்டு யாசகம் பெற்ற பணத்தில் சொந்தமாக இரண்டு மாடி வீடு கட்டி இருக்கிறார். அதோடு விவசாய நிலம் விலைக்கு வாங்கி இருக்கிறார். எப்போதும் ரூ.20 ஆயிரம் மதிப்பு ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகிறார். அவரின் கணவர் பைக் வைத்திருக்கிறார். பைக்கில் தனது குழந்தைகளை ஒவ்வொரு சிக்னலுக்கு அழைத்து சென்று யாசகம் பெற வைப்பது மற்றும் வசூலை வாங்கிச்செல்வது போன்ற வேலையில் கணவர் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணையில் இந்திரா தெரிவித்துள்ளார். விசாரணையின் போது இந்திரா பாய், குழந்தைகளை வற்புறுத்தி யாசகம் பெற அனுப்பியதை ஒப்புக்கொண்டார்.  

இந்திராவை குழந்தைகளின் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுவது, அவர்களை கட்டாயப்படுத்தி யாசகம் பெறும் தொழிலில் ஈடுபட செய்தது போன்றவற்றின் அடிப்படையில் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 45 நாட்களாக அவர்கள் யாசகம் பெற்று சேர்த்து வைத்திருந்த, 2.5 லட்சம் ரொக்க பணமும், அவரது குழந்தையிடம் இருந்து 600 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.அவரது ஏழு வயது பெண் குழந்தையை அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்துள்ளனர். தப்பிச் சென்ற அவரது கணவரையும் பிற குழந்தைகளையும் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.