உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டி; இந்திய பெண்கள் அணி வெற்றி

பூசண்,

தென் கொரியாவின் பூசண் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்திய பெண்கள் அணி ஹங்கேரி அணியை எதிர்த்து விளையாடியது. இந்தியாவின் மணிகா பத்ரா முதல் போட்டியில், தரவரிசையில் 90-வது இடம் வகிக்கும் டோரா மதராஸை 3-2 என்ற செட் கணக்கில் (8-11, 11-5, 12-10, 8-11, 11-4) வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

இதேபோன்று மற்றொரு ஆட்டத்தில் ஜார்ஜினா பொட்டாவை 3-0 என்ற செட் கணக்கில் (11-5, 14-12, 13-11) வீழ்த்தி இந்தியாவை முன்னிலை பெற செய்துள்ளார். இந்தியாவின் ஆயிஹிகா முகர்ஜி, 3-1 என்ற செட் கணக்கில் (7-11, 11-6, 11-7, 11-8) பெர்னாடெட் பாலின்ட்டை வீழ்த்தினார்.

எனினும், ஸ்ரீஜா அகுலா 2 தோல்விகளை சந்தித்துள்ளார். பொட்டா மற்றும் மதராஸ்சிடம் அவர் தோற்றார். இதனால், ஹங்கேரி அணிக்கு எதிராக இந்திய பெண்கள் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. 5 பேர் கொண்ட குழுவில் 3-வது இடம் பிடித்துள்ளது. அடுத்து, உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி நாளை விளையாட உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.