'கலகலப்பு 3' படத்தில் கவின் ? இயக்குனர் சுந்தர் சி மறுப்பு

தமிழ் சினிமா உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. அவர் இயக்கிய 'கலகலப்பு' படத்தின் முதல் பாகம் 2012ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது. அப்படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம், இளவரசு மற்றும் பலர் நடித்திருந்தனர். அதற்கடுத்து 'கலகலப்பு 2' படம் 2018ம் ஆண்டு வெளிவந்தது. அப்படத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ரானி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்திருந்தனர். அப்படமும் வியாபார ரீதியாக வெற்றி பெற்றது.

இயக்குனர் சுந்தர் சி தற்போது 'அரண்மனை 4' படத்தை இயக்கி முடித்துள்ளார். பொங்கலுக்கே அப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது வெளியாகவில்லை. அடுத்த வெளியீட்டுத் தேதியையும் அறிவிக்கவில்லை. இப்படத்திற்குப் பிறகு சுந்தர் சி 'கலகலப்பு' படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கப் போவதாகவும், அப்படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால், சுந்தர் சியின் பிஆர்ஓ அந்த செய்தி தவறான ஒன்று என்று மறுத்துள்ளார். அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டுமே வெளியிடுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.