புனித வெள்ளி, வார இறுதி நாட்களையொட்டி 1,470 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களையொட்டி சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து 1,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மார்ச் 29-ம் தேதி புனித வெள்ளி,30, 31-ம் தேதிகள் வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) என்பதால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புபேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 28, 29, 30-ம்தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூருக்கு 1,150 பேருந்துகள், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவுக்கு 120 சிறப்பு பேருந்துகள், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,470 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பேருந்துகளில் பயணிக்க www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதியஅலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்… 31-ம் தேதி ஞாயிறன்று பொதுமக்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பவசதியாக, தேவைக்கேற்ப அனைத்துஇடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ள இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.