தாம்பரம்: சொத்துக்காக தலை துண்டித்து முதியவர் கொலை – மருமகன் சிக்கிய பின்னணி!

சென்னை தாம்பரம் அடுத்த ஆதனஞ்சேரி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தயாளன் (61). இவரின் மனைவி செல்வி. இந்தத் தம்பதியினருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அந்தப் பகுதியில் தயாளன் புதிதாக வீடு கட்டி வந்தார். அந்த வீட்டில் அவர் படுத்து உறங்கினார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அதனால் தயாளனைத் தேடி அவரின் மகன்கள் புதிய வீட்டுக்கு வந்தனர். அப்போது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தயாளன் இறந்து கிடந்தார். அதனால் அவரின் மகன்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து மணிமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

பார்த்திபன்

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மணிமங்கலம் போலீஸார், தயாளனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார், விசாரணை நடத்தினர். விசாரணையில், தயாளனின் மனைவி செல்விக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. அதனால் தயாளன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் செல்வியின் சகோதரன் தேவேந்திரனின் மகன் பார்த்திபன் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. அதனால் பார்த்திபனிடம் போலீஸார் விசாரித்தனர்.

கொலை செய்யப்பட்ட முதியவர் தயாளன்

விசாரணையில், சொத்துக்காக தன்னுடைய மாமா தயாளனைக் கொலை செய்ததாக பார்த்திபன் போலீஸாரிடம் தெரிவித்தார். இவர் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. அந்த வழக்கில் சிறைக்குச் சென்று வந்த பார்த்திபன், சொத்துக்காக தன்னுடைய அத்தை செல்வியின் கணவர் தயாளனை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பார்த்திபனைக் கைதுசெய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.