ஆம்ஸ்ட்ராங் கொலை: `ஸ்கெட்ச்' போட்டுக் கொடுத்த வழக்கறிஞர் அருள் – அதிர்ச்சி பின்னணி!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி வீட்டின் அருகில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து செம்பியம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதல் நாள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், “ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த பகுதியில் கிடைத்த சி.சி.டி.வி காட்சிகளில் தென்மாவட்ட அரிவாளோடு சிலர் ஓடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்கள் யாரென்று விசாரித்ததில் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் ராமு என்ற வினோத் எனத் தெரியவந்திருக்கிறது. மற்றவர்கள் யார் என்ற தகவலை சேகரித்து வருகிறோம்.

ஆற்காடு சுரேஷ்

கைதுசெய்யப்பட்ட ராமு, கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் கூட்டாளியாக இருந்து வந்திருக்கிறார். இவர்தான் ஆற்காடு சுரேஷின் கன்ட்ரோலில் இருந்த கிளப்பை கவனித்து வந்திருக்கிறார். ஆற்காடு சுரேஷ் கொலைசெய்யப்பட்டதும் அதற்கு பழிக்கு பழிவாங்க காத்திருந்திருக்கிறார் ராமு. அதனால்தான் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவுடன் சேர்ந்து செயல்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து ராமுவிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவிடம் விசாரித்தபோது அவர், `என்னுடைய அண்ணன் கொலையின் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங்தான் இருந்தார். அதனால்தான் அவரைக் கொலைசெய்தோம்’ என்று கூறினார். இதையடுத்து பொன்னை பாலுவுக்கும் ராமுக்கும் யார் பண உதவி செய்தார்கள் என்ற கேள்வியை இருவரிடம் கேட்டு விசாரித்து வருகிறோம். அப்போதுதான் திருநின்றவூரைச் சேர்ந்த வழக்கறிஞரும் பொன்னை பாலுவின் மச்சானுமான அருள் குறித்த தகவல்கள் தெரியவந்தது. இவர், தி.மு.க-வில் இருந்திருக்கிறார். ஆம்ஸ்ட்ராங்கை கொலைசெய்ய வழக்கறிஞர் அருளுடன் சேர்ந்துதான் பொன்னை பாலு திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. அதோடு அவர்களின் வங்கிக் கணக்குகளையும் அவருடைய உறவினர்கள், தெரிந்தவர்களின் வங்கிக் கணக்குகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை

இந்தக் கொலையில் பொன்னை பாலு, அவரின் மச்சான் திருநின்றவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் ஆகியோர்தான் மூளையாக செயல்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை தங்களின் கூட்டாளிகள் மூலம் கடந்த பத்து நாள்களுக்கு மேல் கண்காணித்து வந்திருக்கிறார்கள். பின்னர் கூட்டாளிகளுடன் சேர்ந்து பெரம்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் வைத்து சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அப்போது, ஆம்ஸ்ட்ராங்கை எப்படி கொலைசெய்ய வேண்டும். எந்த நரம்பில் வெட்டினால் அதிக ரத்தம் வெளியேறும் போன்ற தகவல்களை பொன்னை பாலுவும், வழக்கறிஞர் அருளும் கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசித்திருக்கிறார்கள். அதன்படிதான் ஆம்ஸ்ட்ராங்கை இந்தக் கும்பல் வெட்டிக் கொலைசெய்திருக்கிறது. இந்தக் கொலையில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்.

கூலிப்படை குறித்து விசாரித்தபோது ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளியான ஒரு ரௌடி குறித்த தகவல் கிடைத்தது. அவர்தான் தென்மாவட்டத்திலிருந்து கூலிப்படையை அழைத்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அதனால் அந்த ரௌடியையும் எங்களின் சந்தேக வளையத்தில் வைத்திருக்கிறோம். அவர்தான் பொன்னை பாலுவுக்கு உதவியிருக்க வாய்ப்புள்ளது. இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் தனித்தனியாக விசாரித்து அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறோம். சம்பவம் நடந்த இடத்துக்கு இவர்களை அழைத்துச் சென்று விசாரிக்கலாம் என்று முதலில் திட்டமிட்டோம். ஆனால் அதில் சிக்கல் எழ வாய்ப்புள்ளதால் சம்பவம் நடந்த இடத்தில் போலீஸாரை அனுப்பி அங்கிருந்து வீடியோ கால் மூலம் இவர்களிடம் விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம்.

Armstrong: ஆம்ஸ்ட்ராங்

கொலையாளிகள் பயன்படுத்திய பைக்குகள் குறித்து விசாரித்தபோது போலி பதிவு நம்பர்கள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதனால் அந்த பைக்குகளின் உரிமையாளர்கள் விவரங்களை சேகரித்து வருகிறோம். ஆம்ஸ்ட்ராங் கொலை நடப்பதற்கு முன்பு வழக்கறிஞர் அருள், சிலரிடம் போனில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். அதனடிப்படையில் திருநின்றவூரைச் சேர்ந்த மூன்று பேரை பிடித்திருக்கிறோம். அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பொறுத்தவரை கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்திருப்பதாகவே இதுவரை நடந்த விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், உண்மை குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியதால் இந்தக் கொலைக்குப் பின்னணியிலிருப்பவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.