36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்

இஸ்லாமாபாத்: அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல் நடத்தவிருப்பதாக நம்பகமான உளவுத்துறை தகவல் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு, இந்தியா தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும், இந்தியா விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்தது. மேலும், பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டது. மேலும் இருநாட்டு அரசுகளும் தங்கள் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்துள்ளன.

இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சில மணி நேரத்தில் பாகிஸ்தான் தரப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார் கூறியதாவது: ஆதாரமற்ற ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.

பாகிஸ்தானும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் நாங்கள் எப்போதும் கண்டித்து வருகிறோம்.

இந்த விவகாரத்தில் வெளிப்படையான, நடுநிலையான விசாரணை நடத்த பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், இதனை தவிர்த்து மோதல் பாதையை இந்தியா தேர்ந்தெடுக்கிறது. அடுத்த 24 மணி முதல் 36 மணி நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை எங்கள் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவின் எவ்வித ராணுவ தாக்குதலுக்கும் உறுதியாகவும் தீர்க்கமாகவும் பதிலடி கொடுக்கப்படும். அனைத்து விளைவுகளும் இந்தியாவையே சாரும். இவ்வாறு பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் கொடும்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டிஆர்எப் என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.