சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு முடிவுக்கு ராகுல் காந்தி ரியாக்‌ஷன் என்ன?

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “இது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பையும் நீக்குவோம் என்று கூறினேன். ஆனால், மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவித்து வந்தது. இப்போது திடீரென அதைச் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

மேலும், இதற்கென பிரத்யேக பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை திறந்தநிலை செயல்முறையை கடைப்பிடிக்கிறது. அதன் ஐடியாக்களை தேசிய அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பிலும் பின்பற்ற வேண்டுமென கருதுகிறோம். அது சார்ந்து மத்திய அரசுக்கு உதவவும் நாங்கள் தயார்.

சமூக நீதிக்கான எங்களது முயற்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரி வருகிறோம். மேலும், தேசத்தின் அதிகார அமைப்பில் நமது மக்கள்தொகையில் 90 சதவீத மக்களின் பங்களிப்பு என்ன என்பதை அறியவும், அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கவும் விரும்புகிறேன்” என்றார்.

முதல்வர் ஸ்டாலின்: இதனிடையே, “மிகவும் தேவையான சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றதால், ஒரு வழியாக மத்திய பாஜக அரசு அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால், முக்கியமான வினாக்களுக்கு இன்னும் விடையில்லை. இந்தக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? எப்போது முடிவுறும்?

இவர்கள் இதனைத் தற்போது அறிவித்திருப்பது ஒன்றும் தற்செயலானது அல்ல. பிஹார் மாநிலத் தேர்தலில் சமூக நீதி விவகாரம் ஓங்கி ஒலிப்பதால்தான், சந்தர்ப்பவாத நடவடிக்கையாக தற்போது இதனை அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு தமிழக அரசும் திமுகவும் போராடிப் பெற்ற வெற்றி ஆகும். முதன்முதலாக நாம்தான் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். அனைத்துத் தளங்களிலும் இதனை வலியுறுத்தினோம்.

மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கலாம் என சிலர் கோரியபோது கூட, நாம்தான் உறுதியாகச் சொன்னோம். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மத்திய அரசின் பொறுப்பு. மத்திய அரசுதான் இதனை நாடு தழுவிய அளவில் மேற்கொள்ள முடியும், அதுதான் சென்சஸ் சட்டப்படி சட்டரீதியாகவும் செல்லும் என்றோம். நமது நிலைப்பாடு சரி என இன்று நிறுவப்பட்டுள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு: இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் 2020 ஏப்ரல் மாதத்தில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து, இந்த பணி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பிறகு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் மீண்டும் தள்ளிப்போனது. விரைவில் இந்த பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை ஆதி திராவிடர்கள் (எஸ்.சி.), பழங்குடியினத்தவர் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மற்றும் பொது பிரிவினர் என 4 பிரிவுகளின் அடிப்படையில் மட்டுமே மக்களை அரசு வகைப்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில்தான் தேசிய அளவில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவன சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சாதி அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு, கல்வி நிறுவன சேர்க்கையில்
இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் சில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் (சிசிபிஏ) கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அமைச்சரவை பரிசீலிக்கும் என கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுகுறித்து பரிசீலிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. ஆனாலும், சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு (எஸ்இசிசி) நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று காங்கிரஸ் அரசு கருதியது. இதன்படி 2011-ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இதன் துல்லியத்தன்மை குறித்து கேள்வி எழுந்ததால், இதன் விவரம் வெளியிடப்படவில்லை. காங்கிரஸ் கட்சியும், இண்டியா கூட்டணிக் கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஓர் அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தி உள்ளன என்பது தெளிவாகிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது இந்திய அரசியலமைப்பின் 246-வது பிரிவின்படி, மத்திய அரசு பட்டியலின் வரிசை எண் 69-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது மத்திய அரசு தொடர்புடைய விவகாரம் ஆகும். ஆனால், சில மாநில அரசுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி ஆய்வுகளை நடத்தி உள்ளன. இதில் சில மாநிலங்கள் சிறப்பாக செய்துள்ளன. ஆனால், சில மாநிலங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் அரசியல் கோணத்தில் மட்டுமே இத்தகைய ஆய்வுகளை நடத்தி உள்ளன. இது போன்ற ஆய்வுகள் சமூகத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன.

அரசியல் காரணமாக சமூகக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சாதிவாரி ஆய்வுக்குப் பதில், சாதிவாரி கணக்கெடுப்பை மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது” என்றார் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.