சென்னை: இந்திய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், தயா பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனருமான லதா ரஜினிகாந்த், பக்தி சேவா சமயம் அக்ரிபிட் அமைப்புடன் இணைந்து பாரத சேவா மற்றும் சங்கல்பம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்.
திட்டத்தின் தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு காணொளி மூலமாக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: இன்றைய செல்போன் யுகத்தில், நம் பாரத நாட்டின் சம்பிரதாயம், கலாச்சாரம் அதன் அருமை, பெருமைகளை பற்றி எல்லாம் தெரியாமல், இளைஞர்கள் மேற்கத்திய கலாசாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அதேநேரம் வெளிநாட்டினர் மேற்கத்திய கலாச்சாரத்தில் சந்தோஷம் கிடைக்கவில்லை என்று இந்திய கலாச்சாரம் நோக்கி வந்து கொண்டிருகின்றனர்.
தியானம், யோகா போன்றவைகள் மூலம் அவர்கள் பெரிதும் ஈர்க்கப்படுகின்றனர். அந்தவகையில் நம் பாரத நாட்டின் கலாச்சாரத்தையும், சம்பிரததாயத்தையும் இளைஞர்கள் இடத்திலும் மக்களிடையேயும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என லதா எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.