ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தொடர் கடைசி கட்டத்தை நோக்கி நெருங்கி சென்று கொண்டிருக்கும் போது கடந்த 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு ஐபிஎல் தொடர் ஒருவார காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதன் பின்னர் மீண்டும் தொடங்குவது குறித்தான ஆலோசனை நடத்தப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. இதனால் போர் பதற்றம் குறைந்தால், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டி தொடங்கலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று (மே 10) இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் குறைந்துள்ளதால், இரு நாட்டு மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இச்சூழலில் ஐபிஎல் மீண்டும் தொடங்கும் தேதி, பைனல் போட்டி நடைபெறும் தேதி மற்றும் நடைபெறும் மைதானங்கள் குறித்தான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடங்கும் தேதி
அதவாது, ஐபிஎல் தொடர் மீண்டும் மே 16ஆம் தேதி தொடங்க உள்ளது என்றும் தொடரின் இறுதி போட்டி 30ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் சென்னையின் சேப்பாக் மைதானம், பெங்களூருவின் சின்னசாமி மைதானம் மற்றும் ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நகரங்கள் பாகிஸ்தானில் இருந்து வெகு தூரத்தில் இருப்பதால், பிசிசிஐ இந்த முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது குறித்தான அட்டவணை இன்று (மே 11) இரவுக்குள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிங்க: விராட் கோலியின் ஓய்வு முடிவுக்கு இதுதான் காரணமா?
மேலும் படிங்க: ரோகித் சர்மா இடத்தை பிடிக்க போகும் 23 வயது இளைஞர்! ஓப்பனராக இறங்க வாய்ப்பு!