CSK captain IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 ஒரு மறக்க வேண்டிய ஆண்டாக அமைந்துள்ளது. ஏலம் முடிந்த பிறகு பார்ப்பதற்கு ஒரு நல்ல அணியாக இருந்த போதிலும் மைதானத்தில் அவ்வளவு சிறப்பாக யாருமே விளையாடவில்லை. குறிப்பாக சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்டிங் படும் மோசமாக இருந்தது. அதனை சரி செய்வதற்குள் இந்த சீசன் முடிந்து விட்டது. இதற்கு இடையில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினார். இதனால் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் எந்த ஒரு மாற்றமும் கிடைக்கவில்லை.
கடைசி போட்டியில் வெற்றி
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி அதில் பத்தில் தோல்வியுற்று நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் தற்போது புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே. மேலும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளே ஆப்பிற்கு தகுதி பெறாமல் போனது இதுவே முதல் முறை. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கடைசி சில போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. மாற்று வீரர்களாக வந்த சில இளைஞர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்து வருகின்றனர்.
தோனி ஓய்வா?
மேலும் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது. “அதைப் பற்றி முடிவு எடுக்க இன்னும் நாட்களில் உள்ளது. நான் மீண்டும் ராஞ்சிக்கு சென்று சில பைக் ரைடுகளை மேற்கொள்வேன். எனது உடல்நிலை குறித்து முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நான் வருவேன் என்றும் சொல்லவில்லை, வரமாட்டேன் என்றும் சொல்லவில்லை” என்று போட்டி முடிந்த பின்பு தோனி தெரிவித்துள்ளார். அதே சமயம் அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக யார் இருப்பார் என்று கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் ஆக இருப்பார் என்பதை தோனி உறுதி செய்துள்ளார்.
“இந்த சீசனில் முதல் 6 போட்டியில் 4 போட்டிகளை சென்னை சேப்பாக்கத்தில் விளையாடினோம். ஆனால் எங்களுக்கு பேட்டிங் கை கொடுக்கவில்லை. அதேபோல பீல்டிங்கும் மிகவும் சொதப்பலாக இருந்தது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த ஆண்டு வந்த பிறகு இதனைப் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டியது இல்லை” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் தான் சென்னை அணியின் கேப்டனாக இருப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர்களான ஆயுஷ் மாத்ரே, உருவில் படேல், டெவால் பிரவீஸ் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தனர். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் மினி ஏலத்தில் சில வீரர்களை சென்னை அணி கழட்டி விட அதிக வாய்ப்புள்ளது. அதில் தீபக் ஹூடா, விஜய் சங்கர் மற்றும் ராகுல் திருப்பாதி போன்ற வீரர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற அணிகளிலிருந்து டிரேடிங் மூலம் சில வீரர்களை வாங்கவும் சென்னை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.