பாசிம் மேதினிபூர்: இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் இல்லாமல் அழிந்துபோகும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பாசிம் மேதினிப்பூரில் பேசிய அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், “நாடு பயங்கரவாத செயல்களை பொறுத்துக்கொள்ளாது என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவர்கள் நாட்டிற்காக பேச வேண்டும். பயங்கரவாதிகள் பஹல்ஹாமில் ‘சிந்தூர்( குங்குமம்)’ பார்த்து மக்களைக் கொன்றனர். அதனால்தான் ஆபரேஷன் சிந்தூர் நடந்தது. அவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் இல்லாமல் போய்விடும்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பதிலடி கொடுத்து தாக்கிய விதத்தை பாகிஸ்தான் இப்போது புரிந்துகொண்டுள்ளது. அதே தவறை அவர்கள் மீண்டும் செய்தால், அவர்களுக்கு தோட்டாக்கள் மற்றும் ஏவுகணைகள் மட்டுமே கிடைக்கும். அவர்களின் முதுகு இப்போது உடைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இப்போதாவது, அவர்கள் முழு உலகத்திலிருந்தும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் இந்தியா அவர்களை விடாது” என்று கோஷ் கூறினார்.
முன்னதாக, நேற்று குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு வலுவான எச்சரிக்கையை வெளியிட்டார். அதில், நமது சகோதரிகளின் குங்குமத்தை அழிக்க யாராவது துணிந்தால், அவர்களின் முடிவு நிச்சயம் என்று சபதம் செய்தார்.