Vikram Sugumaran: “அவர் எழுதிய கதைகளும், அவருடைய கனவுகளும்..'' -விஜி சந்திரசேகர் இரங்கல்

இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் மறைவு திரைத்துறையினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மதுரையிலிருந்து நேற்றிரவு சென்னை திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இயற்கை எய்தியிருக்கிறார்.

சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட விக்ரம் சுகுமாரனின் உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Vikram Sugumaran with Shanthanu
Vikram Sugumaran with Shanthanu

அவருடைய உடல் இன்று மதியம் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், விக்ரம் சுகுமாரனின் ‘மதயானைக்கூட்டம்’ திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை விஜி சந்திரசேகரிடம் பேசினோம்.

நம்மிடையே பேசிய நடிகை விஜி சந்திரசேகர், “இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் மறைவுச் செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

நான் இப்போது நெய்வேலியில் இருக்கிறேன். இரவு 2 மணிக்குத்தான் எனக்கு இந்தத் தகவல் தெரிந்தது. அப்போதிருந்து எனக்கு தூக்கமே இல்லை.

அவர் பேசிய வார்த்தைகள் எனக்குள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. இப்போது ஒரு 20 நாள்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசியிருந்தார்.

அவர், ‘ஒரு கதை சொல்லணும். அது நல்ல கதை. உங்களுக்கு ஒரு அங்கீகாரத்தை வாங்கிக் கொடுக்கணும்’ என்று சொன்னார்.

அவரிடம் நான், ‘இல்லை பா, நீங்கள் நல்ல இயக்குநர். உங்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கணும்’ என்று சொன்னேன்.

Viji Chandrasekar about Vikram Sugumaran
Viji Chandrasekar about Vikram Sugumaran

இந்த வார்த்தைகள்தான் இப்போது என் செவிகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. எல்லோருமே இப்போது மன அழுத்தத்தில் தான் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்படியான மன அழுத்தம் ஏற்படாத வகையில் அனைவரும் உடல்நலத்தை கவனிக்க வேண்டும். இப்படி அடுத்தடுத்து மரணங்கள் நிகழும்போது எனக்கு அது கஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

விக்ரம் சுகுமாரன் அற்புதமான சிந்தனையாளர். அவர் எழுதிய கதைகளுக்கும், அவருடைய கனவுகளுக்கும் இப்போது அர்த்தமில்லாமல் போய்விட்டது.

எனக்கு ‘மதயானைக்கூட்டம்’ திரைப்படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அந்தப் படத்துக்கு என்னை பயங்கரமாக கொண்டாடினார்கள்.

மதுரை பக்கமெல்லாம் போனால் ‘மதயானைக்கூட்டம் மேடம்’ என்றுதான் என்னை அடையாளப்படுத்துவார்கள்.

‘மதயானைக்கூட்டம்’ திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும், எனக்கு நல்ல பெயரை அந்தப் படம் பெற்றுக் கொடுத்தது.

விக்ரம் சுகுமாரனுடன் நான் சமீபத்தில் பேசியதால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர் படமாக்கும் காட்சிகள் யதார்த்தத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். ஒரு சின்ன பொருள் கூட சரியாக இல்லை என்றால் அவருக்கு கோபம் வந்துவிடும்.

Viji Chandrasekar about Vikram Sugumaran
Viji Chandrasekar about Vikram Sugumaran

ஆர்ட்டிஸ்ட், வசனங்கள் போன்றவற்றைத் தாண்டி அனைத்திலும் ரொம்ப சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். வசனங்களைக் கூட படப்பிடிப்புத் தளத்தில் வைத்து ரொம்ப இயல்பாகப் பேசுவது போல மாற்றிவிடுவார். இப்படியான விஷயங்களை நான் அவரிடம் ரசிப்பேன்.

அவரிடம் இந்த விஷயங்களைக் குறிப்பிட்டு பாராட்டும்போது, ‘அதுதானே மா எல்லாம்’ என்று சொல்வார். ஒரு விஷயம் ‘லைவ்’ ஆக அவர் வியூ ஃபைண்டரில் தெரியும் வரை சமரசம் செய்துகொள்ளவே மாட்டார்.

அந்த அளவுக்கு ஈடுபாடு இருப்பதும் ரொம்ப முக்கியம். கடின உழைப்பைத் தாண்டி நமக்கு ஒரு குடும்பம், உடல்நலம் இருக்கிறது. அதை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அது நம் கையில் தான் இருக்கிறது.

இந்த விஷயத்தை விக்ரம் சுகுமாரன் மேலிருந்து பார்க்கும்போது, ‘நான் இன்னைக்கு இல்லையா’ என்று அவருக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

Viji Chandrasekar about Vikram Sugumaran
Viji Chandrasekar about Vikram Sugumaran

200 வருடம் நாம் வாழப்போகிறோம் என்ற எண்ணத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். நம் உடல்நலத்தைக் கவனிக்க வேண்டியதும் முக்கியம். அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.” என்றார் வருத்தத்துடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.