பிரதமர் மோடியுடன் பராகுவே அதிபர் சந்திப்பு – இருதரப்பு உறவை மேம்படுத்த ஆலோசனை

புதுடெல்லி: தென் அமெரிக்க நாடான பராகுவேவின் அதிபர் சாண்டியாகோ பெனா பலாசியோஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

பராகுவே அதிபரை வரவேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உங்கள் வருகை உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்கது. நீங்கள் டெல்லிக்கு மட்டுமல்ல, மும்பைக்கும் வருகை தருகிறீர்கள். இது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகளை உருவாக்குவதற்கான உங்கள் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் மூலம், பகிரப்பட்ட வளர்ச்சி மற்றும் செழுமைக்கான பாதையை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

மின்னணு தொழில்நுட்பம், முக்கியமான கனிமங்கள், எரிசக்தி, வேளாண்மை, சுகாதாரம், பாதுகாப்பு, ரயில்வே, விண்வெளி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார கூட்டாண்மை போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை நாம் காண்கிறோம். தென்னமெரிக்காவின் வர்த்தக தொகுப்பு நாடுகளுடன்(மெர்கோசர்) எங்களுக்கு முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. அதை மேலும் விரிவுபடுத்த நாம் இணைந்து பணியாற்றலாம்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் பராகுவேயும் ஒன்றுபட்டுள்ளன. சைபர் குற்றம், திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பகிரப்பட்ட சவால்களுக்கு எதிராகப் போராடுவதற்கு ஒத்துழைப்புக்கான மகத்தான சாத்தியக்கூறு உள்ளது. இந்தியாவும் பராகுவேயும் உலகளாவிய தெற்கின் ஒருங்கிணைந்த பகுதிகள். நமது நம்பிக்கைகள், விருப்பங்கள் மற்றும் சவால்கள் ஒரே மாதிரியானவை. அதனால்தான் இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள முடியும்.

கோவிட் பெருந்தொற்றின்போது இந்தியா தனது தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் பராகுவேக்கு ஆதரவை வழங்கியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் திறன்களை மேலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த ஒத்துழைப்பு உணர்வைத் தொடர நாங்கள் எதிர்நோக்குகிறோம். உங்கள் வருகை எங்கள் உறவுகளில் நம்பிக்கை, வர்த்தகம் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பின் தூண்களுக்கு புதிய பலத்தை சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். இது இந்தியா-லத்தீன் அமெரிக்க உறவுகளுக்கு புதிய பரிமாணங்களைச் சேர்க்கும்” என தெரிவித்தார்.

பிரதமர் மோடியுடனான தனது சந்திப்பு குறித்து சாண்டியாகோ பெனா பலாசியோஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியா, அதன் பரந்த மக்கள்தொகை, தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் உலகளாவிய தலைமையுடன் உள்ளது. அதோடு, பராகுவேவின் முக்கிய மூலோபாய கூட்டாளியாகவும் திகழ்கிறது. எனது அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்தினேன். இருதரப்பு உறவை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

அன்பான வரவேற்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன், பராகுவே உலகிற்கு வழங்க வேண்டிய அனைத்தையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன். சுத்தமான, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வளமான நிலம், ஏராளமான நன்னீர், வளர்ச்சி ஆகியவை தொடர்பாக நாங்கள் ஆலோசித்தோம். தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் அறிவியல் போன்ற முக்கிய துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தை நாங்கள் விவாதித்தோம். நிலையான வளர்ச்சிக்கான பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியாவுடன் இணைந்து செயல்பட பராகுவே தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.